காஷ்மீருக்குள் ஊடுறுவ 200 தீவிரவாதிகள் காத்திருப்பதாக பரபரப்பு தகவல்..!
டெல்லி: காஷ்மீருக்குள் ஊடுறுவ 200 தீவிரவாதிகள் காத்திருப்பதாக உளவுப் பிரிவு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதையடுத்து காஷ்மீர் முழுவதும் தீவிரக் கண்காணிப்பும், பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் பெரும் தாக்குதலுக்கு இவர்கள் திட்டமிட்டுள்ளதாகவம், அதுதவிர நாடு முழுவதும் விமானப்படைத் தளங்களைத் தாக்கும் திட்டமும் தீவிரவாதிகளிடம் இருப்பதாகவும் உளவுத்துறை தகவல்கள் எச்சரித்துள்ளன.
இதையடுத்து நாடு முழுவதும் விமானப் படை தளங்கள், விமான நிலையங்களில் உஷார் நிலை அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
150 முதல் 200 பேர்
காஷ்மீரில் ஊடுருவலில் ஈடுபடுவதற்காக எல்லையில் 150 முதல் 200 தீவிரவாதிகள் வரை பாகிஸ்தான் பகுதியில் காத்திருப்பதாக எல்லைப் பாதுகாப்பு படை ஐ.ஜி. விகாஷ் சந்திரா தெரிவித்துள்ளார். எல்லைப் பாதுகாப்புபடையின் உளவுதுறை திரட்டிய தகவலின் அடிப்படையில் அவர் இதை தெரிவித்தார்.
நாச வேலைகளில் ஈடுபடத் திட்டம்
காஷ்மீர் பகுதியில் அமைதியின்மையையும் பதட்டத்தையும் ஏற்படுத்தும் வகையில் பாகிஸ்தானும் தீவிரவாத அமைப்புகளும் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்து நாச வேலைகளில் ஈடுபடுவதாக அவர் மேலும் தெரிவித்தார். தீவிரவாதிகள் அனைவரும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக ஊடுருவலில் ஈடுபடுகிறார்கள்.
தீவிரவாதிகள்
இவ்வாறு ஊடுருவலில் ஈடுபட்ட பல தீவிரவாதிகள் துப்பாக்கி சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். காஷ்மீர் போலீசாருடன் மத்தியரிசர்வ் போலீஸ் படையினர், துணைராணுவப்படையினர் அங்கு விழிப்புணர்வுடனும், தியாக மனப்பான்மையுடனும் செயல்பட்டு அமைதியை நிலைநாட்டுகிறார்கள். ஒவ்வொரு படையினரும் நிலைமைக்கு ஏற்ப செயல்படுவதாக ஐ.ஜி. விகாஷ் சந்திரா தெரிவித்தார்.
விமானப்படைத் தளங்கள், விமான நிலைங்களில் உஷார் நிலை
இதற்கிடையே விமானப்படைத் தளங்கள் மற்றும் விமான நிலையங்களை தீவிரவாதிகள் தாக்க கூடும் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனையடுத்து நாடு முழுவதிலும் உள்ள முக்கிய விமானப்படை நிலையங்கள் மற்றும் தளங்களுக்கான பாதுகாப்பையும், கண்காணிப்பையும் மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
|
பாதுகாப்பு அதிகரிப்பு
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மூத்த விமானப்படை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உளவுத்துறையின் எச்சரிக்கை மிகவும் பொதுவானதுதான். ஆனாலும் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து விமானப்படை நிறுவனங்கள் மற்றும் தளங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.