கணவனை கொன்று.. காதலனுடன் பிளாட் எடுத்து குடித்தனம் நடத்திய சோனம்.. அதுவும் எங்க தெரியுமா?
சில்லாங்: மேகாலயாவுக்கு ஹனிமூன் சென்ற கணவன் கொலை வழக்கு நாட்டையே அதிர வைத்துள்ளது. மர்மங்கள் நீடிக்கும் இந்த வழக்கில் தினசரி பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் கணவனை கொன்றுவிட்டு, சோனம் தன் காதலனுடன் சொந்த ஊரிலேயே பிளாட் எடுத்து தங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்தியப்பிரதேசம், இந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா ரகுவன்ஷி (வயது 29). சொந்தமாக தொழில் செய்து வந்தார். இவருக்கும், சோனம் என்ற 25 வயது பெண்ணுடன் கடந்த மே மாதம் 11 ஆம் தேதி இந்தூரில் திருமணம் நடைபெற்றது. இரு வீட்டார் பேசி சிறப்பாக நடைபெற்ற திருமணத்தில் இப்படி ஒரு திருப்பம் வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

திருமணமாகி சில நாட்களே ஆன நிலையில், இந்த புதுமண தம்பதி கடந்த மே 20 ஆம் தேதி மேகாலயாவுக்கு ஹனிமூன் சென்றுள்ளனர். யாரும் எதிர்பாராத வகையில் கடந்த மே 23 ஆம் தேதி திடீரென்று புதுமண தம்பதி இருவரும் மாயமாகிவிட்டனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரண்டு பேரின் குடும்பத்தினர் அளித்த புகாரில் காவல்துறையில் வழக்குப்பதிவு செய்து புதுமண தம்பதியை தேடி வந்தனர்.
இதற்காக மேகாலயா காவல்துறை சார்பில் சிறப்புப் புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த ஜூன் 2 ஆம் தேதி ராஜா ரகுவன்ஷியின் சடலம் ஜார்ஜ் பகுதி அருகே உள்ள காட்டில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனை கொலை செய்யப்பட்டது உறுதியானது. இந்நிலையில் கணவனை கொலை செய்த குற்றத்துக்காக சோனம் கடந்த ஜூன் 8 ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சோனம் தன்னை விட வயதில் இளையவரான ராஜ் குஷ்வஹா என்பவரை காதலித்து வந்துள்ளார். தங்கள் காதல் உறவை தொடர சோனம், ராஜ் இணைந்து கூலிப்படை மூலம் இந்த கொலையை அரங்கேற்றியதாக காவல்துறை கூறியது. இதுதொடர்பாக சோனம், காதலன் ராஜ், கூலிப்படையினர் ஆனந்த், ஆகாஷ், விஷால் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
சோனம் தான் இந்த ஹனிமூன் திட்டத்துக்கான ஸ்கெட்ச் போட்டார் என்றும், காதலன் மற்றும் கூலிப்படையினருக்கு தன் இருப்பிடம் குறித்து லைவ் லொக்கேசன் அனுப்பி அப்டேட் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் கூலிப்படையினரால் அவரை கொலை செய்ய முடியாவிடின், சோனமே ரகுவன்ஷியை மலை உச்சியில் இருந்து தள்ளிவிடுவதாக இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், "ராஜா ரகுவன்ஷியை கொலை செய்துவிட்டு சோனம் மற்றும் ராஜ் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்துள்ளனர். அந்த வகையில் அவர்கள் தங்களின் சொந்த ஊரான இந்தூருக்கும் சென்றுள்ளனர். அங்கு ஒரு பிளாட்டை வாடகைக்கு எடுத்து இருவரும் 3 நாட்கள் ஒன்றாக தங்கியுள்ளனர். இந்தூர் அருகே உள்ள தேவாஸ் நகா என்ற பகுதியில் அந்த அப்பார்ட்மென்ட் உள்ளது.
ராஜா ரகுவன்ஷியை கொலை செய்துவிட்டு உடனடியாக அவர்கள் அங்கு வந்துதான் தங்கியுள்ளனர். மே 25, 26, 27 ஆகிய 3 தேதிகள் அங்கு தங்கியுள்ளனர். அப்போது ராஜ் தன் வீட்டுக்கு, அலுவலகத்துக்கு எல்லாம் சென்று சகஜமாக இருப்பதுபோல காட்டியுள்ளார். பிறகு இங்கிருந்தால் சிக்கிவிடுவோம் என்று பயந்து உத்தரப்பிரதேசம் சென்றுள்ளனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்." என்றனர்.












Click it and Unblock the Notifications