பெங்களூரில் கவுரவ கொலை: மகளின் காதலனை கொன்று சடலத்துடன் போலீஸ் நிலையத்தில் சரணடைந்த தந்தை
பெங்களூர்: மகளின் காதலனை கொலை செய்து சடலத்தை பைக்கில் வைத்து எடுத்து வந்து காவல் நிலையத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் சரணடைந்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர், கே.ஆர்.புரம், தேவச்சந்திரா ஜேசி லேஅவுட்டை சேர்ந்தவர் ரியாஜ் கான், ஆட்டோ டிரைவர். இவரது மகளுக்கும், ஜெயநகர் அருகேயுள்ள சித்தாபுராவில் வசித்த சாதிக் (22) என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.
இதையறிந்த ரியாஜ்கான் மகளையும், சாதிக்கையும் கண்டித்துள்ளார். ஆனால் இதை பொருட்படுத்தாத சாதிக், ரிஜாஜ்கான் மகளை கூட்டிக்கொண்டு ஓடிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தனது மகளை காணவில்லை என்று, கடந்த 2ம்தேதி, போலீஸ் நிலையத்தில் ரியாஜ்கான் புகார் அளித்திருந்தார்.
இதனிடையே, தனது மகள் சாதிக் வீட்டில், இருப்பதை தெரிந்துகொண்ட ரியாஜ்கான், ஆத்திரத்துடன் நேற்றிரவு சித்தாபுராவுக்கு சென்றுள்ளார். அங்கு சாதிக்கின் நண்பர்கள் சிலர் சேர்ந்து, ரியாஜை சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். இதையடுத்து பன்னேருகட்டா ரோடு, ஹொம்பதேவனஹள்ளியிலுள்ள தனது உறவுக்காரர் வீட்டுக்கு சாதிக்கை வரும்படி கூறிவிட்டு ரியாஜ்கான் கிளம்பி சென்றுவிட்டார்.
இதை நம்பிய சாதிக், இன்று ஹொம்பதேவனஹள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு வந்ததும் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாதிக்கின் கழுத்தை அறுத்து கொலை செய்த ரியாஜ், சடலத்தை சாக்குமூட்டையில் வைத்துக்கொண்டு தனது ஸ்கூட்டரில் சுமார் 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கேஆர்புரம் காவல் நிலையம் வந்துள்ளார்.
சாக்கு மூட்டையில் இருந்த சடலத்தை போலீசாரிடம் காண்பித்துவிட்டு ரியாஜ்கான் போலீசில் சரணடைந்துவிட்டார். இருப்பினும் கொலை நடந்த பகுதி வேறு என்பதால் அந்த காவல் நிலையத்திற்கு கொலை வழக்கை மாற்றியுள்ளனர் போலீசார்.












Click it and Unblock the Notifications