ரத்தக் காடான காஷ்மீரின் மினி சுவிஸ்.. இவன் தான் அந்த கொடூரன்! நொடியில் தரைமட்டமான தீவிரவாதியின் வீடு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் 26 பேரை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகளில் ஒருவனான ஆதில் தோகரின் வீடு இடித்து தரைமட்டமாக்கப்பட்டு இருக்கிறது.
காஷ்மீரின் நகரில் பாஹல்காம் பகுதியில் மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் புல்வெளி உள்ளது. அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குழுமியிலிருந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமை ராணுவ உடை அணிந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த கோர தாக்குதலில் உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 26 பேர் கொடூரமாக சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். அமைதியான பைன் மரக்காடுகள் அமைந்த அந்த பகுதி ரத்த வாடை நிறைந்து காணப்பட்டது.
தொடர்ந்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், குதிரை ஓட்டிகள் அங்கிருந்த மக்களை காப்பாற்றினர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து குற்றவாளிகளை அடையாளம் காணும் பணி நடைபெற்று வரும் நிலையில் அவர்களது புகைப்படங்களும் பெயர்களும் வெளியாகினர். அதில் ஒருவன் ஆதில் தோகர் என்றும், அவனது பட்டப்பெயர் ஆதில் குரீ எனவும் சொல்லப்படுகிறது.
தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றதாக கூறப்படுகிறது குறிப்பாக. ஆதில் தோகர் கடந்த 2018 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்றிருக்கிறார். அங்கு தடை செய்யப்பட்ட லஸ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பில் ஆயுதப் பயிற்சி பெற்றதாகவும். மீண்டும் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவி இருந்த நிலையில் இந்தியாவில் தற்போது தாக்குதலை அரங்கேற்றி இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் பங்கேற்ற பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு வழிகாட்டியாகவும், தேவையான வசதிகளை ஏற்படுத்தும் ஒருவராகவும் ஆதில் தோகர் செயல்பட்டுள்ளார் என உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தாக்குதலில் ஈடுபட்ட ஆதில் தோகர், அலி பாய் மற்றும் ஹாஷிம் மூசா ஆகிய மூன்று லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளின் கைது தொடர்பாக தகவல் அளிக்கும் நபருக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என அனந்த்நாக் மாவட்டக் காவல் துறையினர் அறிவித்துள்ளனர். தற்போது காவல்துறையும், உளவுத்துறையும் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையில், காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகளை அடையாளம் கண்டறிந்து ஒழிக்கும் பணிகள் முடுக்கப்பட்டுள்ளன.
#WATCH | Anantnag, J&K | Visuals of a destroyed house that allegedly belonged to a terrorist involved in the Pahalgam terror attack pic.twitter.com/hYav2gUpCC
— ANI (@ANI) April 25, 2025
இந்த நிலையில் பகல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி ஆதில் தோகரின் வீடு இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பயங்கரவாதிகளை கண்டறியும் பணி நடைபெற்று வரும் நிலையில் உள்ளூர் போலீசார், பொதுமக்கள் இணைந்து அந்த வீட்டை தரைமட்டமாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு தீவிரவாதியான ஆஷிப் ஷேக்கின் வீடும் இடித்து தரை மட்டமாக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் பஹல்காம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத தடுப்பு படையினரும் உள்ளூர் போலீசாரம் இணைந்து தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். சந்தேகத்திற்குரிய நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications