2020ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு என்பதே வெங்கையா நாயுடுவின் லட்சியமாம்!
டெல்லி: வீட்டுக்கடனுக்கான வட்டி குறைக்கப் படும் என்றும், அதன்மூலம் வரும் 2020ம் ஆண்டு அனைவருக்கும் சொந்த வீடு கனவு நனவாகும் என்றும் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு கடந்த 26ம் தேதி பதவியேற்றது. அப்போது நகர்ப்புற மேம்பாடு, வீட்டு வசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக பாஜக மூத்தத் தலைவர் வெங்கையா நாயுடு பொறுப்பேற்றார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார் வெங்கையா நாயுடு. அப்போது அவர் கூறியதாவது :-
அனைத்து வசதிகளையும் கொண்ட நூறு நவீன நகரங்களை உருவாக்கவும், அனைவருக்கும் வீடு கிடைக்கும் வகையில், வீட்டு கடன்கள் மீதான வட்டி விகிதத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் 11 சதவீதமாக இருந்த வீட்டுக்கடன் வட்டி விகிதம் 7 சதவீதமாகக் குறைக்கப் பட்டது. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் அது 10 சதவீதமாக உயர்த்தப் பட்டது.
வரும் 2020ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு என்பதே எனது லட்சியத் திட்டம். நாட்டின் அனைத்து மக்களும் தங்களுக்கு ஒரு காங்கிரீட் வீடு இருக்கிறது என்ற நிலை உருவாக வேண்டும். இது சொல்வது எளிதாக இருந்தாலும், செயல்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. அதே சமயம் இது முடியாத விஷயம் அல்ல. இதனை நிறைவேற்ற கடின உழைப்பு தேவை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications