பலத்த பாதுகாப்பு இருந்தும் கசிந்த ஆதார் தகவல்கள்... இதை மத்திய அரசு எப்படி சரி செய்ய போகிறது?
டெல்லி: பலத்த பாதுகாப்புகள் இருந்தும் ஆதார் தகவல்கள் திருடப்பட்டு வரும் சம்பவங்கள் நடந்துள்ள நிலையில் இதை மத்திய அரசு எப்படி சரி செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆதார் அட்டைகள் கட்டாயமா, இல்லையா என்பது குறித்து இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் ஆதார் கட்டாயம் என்று 4 நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அப்போது தனிநபரின் தகவல்களை பாதுகாப்பது உள்ளிட்ட சிறு சிறு மாற்றங்களை செய்யவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
[200 கேமராக்கள்.. 150 சிஆர்பிஎப் வீரர்கள்.. ஆதார் தகவல்கள் எங்கே பாதுகாக்கப்படுகிறது தெரியுமா?]
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் நடந்த வழக்கு விசாரணையின்போது ஆதார் தகவல்கள் கசிவதாக மனுதாரர்கள் தெரிவித்தனர். அப்போது ஆதார் தகவல்கள் ஹரியாணா மாநிலத்தில் 13 அடி உயர சுற்றுச்சுவர் கொண்ட கட்டடத்தில் பாதுகாக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
பகிரங்கம்
ஆதார் தகவல்களை திருட முடியாது என்று கூறிய டிராய் தலைவர் ஆர் எஸ் சர்மா தனது ஆதார் எண்ணை வெளியிட்டார். அப்போது முடிந்தால் என்னுடைய தகவல்களை வெளியிடுங்கள் பார்ப்போம் என்று பகிரங்கமாக சவால் விடுத்தார்.
ஆப்பிள் ஐபோன்
இவர் சவால் விடுத்த அடுத்த நாளே சர்மாவின் பான் எண், மாற்று போன் எண், ஈமெயில் ஐடி, அவர் பயன்படுத்தும் போனின் வாட்ஸ் ஆப் படம் ஆகியவற்றை ஹேக்கர்கள் வெளியிட்டனர். இன்னொரு ஹேக்கர் சர்மா பயன்படுத்தும் ஆப்பிள் ஐபோனின் எண்ணை வெளியிட்டார்.
ஹரியாணாவில்
சர்மா தனது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வில்லை என்ற தகவலையும் ஹேக்கர்கள் தெரிவித்தனர். இது போல் ரூ. 500 கொடுத்தால் 10 நிமிடத்தில் ஆதார் தகவல்கள் கிடைப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. மேலும் பெறப்பட்ட தகவல்கள் சம்பந்தப்பட்ட ஆதார் எண் கொண்டவருடையதுதான் என்பதை ஹரியாணாவில் ஆதார் தகவல்கள் பாதுகாப்பு நிறுவனமும் தெரிவித்தது.
மத்திய அரசு என்ன செய்ய போகிறது
இது போன்று ஏராளமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆதார் தகவல்களை பாதுகாப்பது குறித்து உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. எனவே ஆதார் தகவல்கள் திருடப்படாமல் இருக்க மத்திய அரசு என்ன செய்ய போகிறது.