எப்படி ஷிண்டே உங்களால் நிம்மதியாக தூங்க முடிகிறது?.. கெஜ்ரிவால் கேள்வி
டெல்லி: டெல்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லை. குற்றச் செயல்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவால் நிம்மதியாகத் தூங்க முடிகிறது என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லி சாலையில் தனது போராட்டத்தைத் தொடர்ந்து வரும் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசுகையில், டெல்லியில் என்ன நடக்கிறது என்று ஷிண்டேவுக்குத் தெரியுமா.. குற்ற் செயல்கள் நடைபெறுவது அவருக்குத் தெரியுமா..
குற்றச் செயல்கள் அதிகரித்தபடி உள்ளன. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது. ஆனால் நிம்மதியாகத் தூங்குகிறார் ஷிண்டே. எப்படி அவரால் தூங்க முடிகிறது என்று தெரியவில்லை.
இது பலசரக்குக் கடை இல்லை. நாங்கள் பேரம் பேச விரும்பவில்லை. எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் நடைபெறும்.
போராட்டம் நடைபெறும் பகுதிக்கு குடிநீர், உணவு கொண்டு வர போலீஸார் தடுத்து வருகின்றனர். அனைவரும் குடிக்க தண்ணீரில்லாமல், சாப்பிட உணவு இல்லாமல் சாகட்டும் என்று கூற விரும்புகிறதா மத்திய அரசு.
மக்கள் பெருமளவில் இங்கு வருகின்றனர். ஆனால் அவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்துகிறது போலீஸ். மேலும் மக்களை தேர்வு செய்து பஸ்சில் ஏற்றி சரமாரியாக அடித்து உதைக்கின்றனர் போலீஸார். இதுதான் ஜனநாயகமா... என்றார் கெஜ்ரிவால்.