ஹிமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் க்ளீன் ஸ்வீப்! டெபாசிட்டை இழந்து தோற்ற பாஜக! பின்னணியில் 5 காரணங்கள்
சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில், இடைத்தேர்தல் நடந்த மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும், மண்டி லோக்சபா தொகுதியிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. பாஜக அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியுள்ளது. ஆளும் கட்சியாக இருந்தபோதிலும், ஒரு சட்டசபை இடைத் தேர்தலில் பாஜக டெபாசிட்டை இழந்து படுதோல்வியடைந்துள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நவம்பரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் தலைமையிலான பாஜக அரசின் செயல்திறனுக்கான மதிப்பீடாக இந்த இடைத்தேர்தல்கள் பெரிதும் கருதப்பட்டன.
மாநில மற்றும் மோடி அரசுக்கு எதிரான அதிருப்தி அலைதான் இந்த மாபெரும் வெற்றியை காங்கிரசுக்கு பரிசளித்துள்ளது.
கோவிட் தொற்றுநோய்க்கு மத்தியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு பாஜக மீது மக்களின் கோபத்தை திருப்பியுள்ளது. மலை மாநிலமான ஹிமாச்சல், பெரும்பாலும் சுற்றுலாத் துறை வருவாயை நம்பியுள்ளது. ஆனால் கொரோனா ஊரடங்குகளால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்லவில்லை.
நவ1:ஆந்திரா, கேரளா, கர்நாடகா, ம.பி, சத்தீஸ்கர், ஹரியானா மாநிலங்கள் உருவான நாள்-பிரதமர் மோடி வாழ்த்து
பொருளாதார வீழ்ச்சி
ஆப்பிள் விலையில் ஏற்பட்ட சரிவு பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்தியது, குறிப்பாக மண்டியில் பிரதீபா சிங் தனது தேர்தல் பிரச்சாரத்தில் டெல்லியில், விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் பற்றிய பிரச்சினையை எழுப்பினார். டெல்லி எல்லைகளில் ஓராண்டு காலமாக நடக்கும் விவசாயப் போராட்டத்தை குறிப்பிட்டு, கண் பார்க்காத, காது கேட்காத, வாய் பேசாத எதேச்சதிகார அரசு என்று மத்திய அரசை விமர்சனம் செய்தார்.
மோடி அரசு செயல்பாடு
குலு நகரிலுள்ள ஒரு சால்வை மற்றும் கம்பளி உற்பத்தியாளர் கூறுகையில், ஹிமாச்சல் முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் தனது சொந்த தொகுதியான செராஜைச் சுற்றி சுற்றுலாவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினார், பிற பகுதிகளை கண்டு கொள்ளவில்லை என்றார்.
முதன்முறையாக வாக்களித்த சுந்தர்நகரில் உள்ள இளைஞர் ஒருவர் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகள் தன்னை ஈர்க்கவில்லை என்றார்.
பாஜக வேட்பாளர் டெபாசிட் போச்சு
மண்டி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் பிரதிபா சிங் வெற்றியை விடுங்கள், ஜுப்பல்-கோட்காய் சட்டமன்றத் தொகுதியில், பாஜக வேட்பாளர் நீலம் சாரைக் டெபாசிட்டை இழந்துள்ளார். 2644 ஓட்டுகளை மட்டுமே அவர் பெற்றார். ஆளும் கட்சியாக பாஜக இருந்தும் அதன் வேட்பாளர் டெபாசிட்டை இழந்துள்ளார். ஜுப்பல் கோத்காயில், பாஜக அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து களம் கண்ட அந்த கட்சியைச் சேர்ந்த சேத்தன் பிரக்தா 2வது இடம் பிடித்துள்ளார். வேட்பாளர் தேர்வில் தப்பு செய்துவிட்டோம் எனக் கூறி வருகிறது பாஜக. ஒருவேளை சேத்தன் பிரக்யாவை வேட்பாளராக அறிவித்திருந்தால் வென்றிருக்கலாம் என பாஜக தலைவர்கள் இப்போது கூறி வருகிறார்கள்.
மோடி அலை இல்லை
இமாச்சலப் பிரதேசத்தில் முந்தைய தேர்தல்களில் இருந்தது போல் இப்போது மோடி அலை இல்லை. மறைந்த ராம் ஸ்வரூப் ஷர்மா இரண்டு முறை மோடி அலையால் மண்டி தொகுதியில் வென்றார். 2019 இல் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். ஆனால் இப்போது அந்த தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சி இருந்தபோதிலும், மக்கள் லோக்சபா தேர்தலில் காங்கிரசை தேர்ந்தெடுத்துள்ளனர். இமாச்சல பிரதேசத்தில் பாஜக தோற்க 5 காரணங்கள் உள்ளன.
அனுதாப வாக்கு:
65 வயதான பிரதீபா சிங், 2004 தேர்தல் மற்றும் 2013 இல் நடந்த பாராளுமன்ற இடைத்தேர்தல்களில் வென்றவராகும். இவர் 21 ஆண்டு இமாச்சலப் பிரதேச முதல்வராக இருந்தவரும், ஐந்து முறை மக்களவை உறுப்பினர், மற்றும் மத்திய அமைச்சராக பதவி வகித்தவருமான வீரபத்ரா மனைவியாகும். 87 வயதான வீரபத்ரா, ஜூலை மாதம் உயிரிழந்தார். அவரது மனைவிக்கு செலுத்தும் வாக்குகளை மக்கள் வீரபத்ராவிற்கு கொடுத்த மரியாதையாக நினைத்தனர்.
விலைவாசி உயர்வு
தேர்தல் பிரச்சாரக் காலத்தில், எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து வாக்காளர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதை பல வீடியோக்களில் பார்க்க முடிந்தது. விலைவாசி உயர்வு பெரிய அளவில் வெளிப்பட்டது. ஹிமாச்சல பிரதேசம் மலை மாநிலம். எனவே அனைத்து பொருட்களும் சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்பட வேண்டும். நாளுக்கு நாள் உயர்ந்து வரும், டீசல் விலை சாமானியர்களின் பட்ஜெட்டில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஆட்சிக்கு எதிரான அலை
இமாச்சலப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நவம்பரில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த இடைத்தேர்தல் மாநிலத்தில் பாஜக அரசு பற்றிய மதிப்பீடாக பார்க்கப்பட்டது. முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் மண்டி மாவட்டத்தில் உள்ள செராஜ் தொகுதியிலிருந்து எம்எல்ஏவானவர். ஆனால், அங்கு லோக்சபா தேர்தலில் பாஜக தோற்றுள்ளது. ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலை வீசுவதை இது உறுதி செய்துள்ளது.
மணாலி நகருக்கு நான்கு வழிச் சாலை அமைத்தபோது நிலங்களை இழந்தவர்களுக்கு கூடுதல் இழப்பீடு கொடுக்கப்படும் என்ற வாக்குறுதி, பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு காற்றில் பறக்க விடப்பட்டது. இதுவும் மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகள் போராட்டம்: டெல்லி எல்லையில் ஓராண்டாக விவசாயிகள் போராட்டம் நடத்தியும், மோடி அரசு அதை கண்டுகொள்ளவில்லை. இந்த விஷயத்தை பிரதீபா சிங் தனது பிரச்சாரத்தில் தீவிரமாக கையில் எடுத்தார்.