இன்னும் எத்தனை நிர்பயாக்களோ?: டெல்லியில் சீரழிக்கப்பட்ட தலித் சிறுமி பலி
டெல்லி: டெல்லியில் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டு வலுக்கட்டாயமாக திராவகம் போன்ற ஒன்று குடிக்க வைக்கப்பட்ட 14 வயது சிறுமி பலியாகியுள்ளார். இது குறித்து டெல்லி மகளிர் ஆணையம் மத்திய, மாநில அரசுகளை கடுமையாக கண்டித்துள்ளது.
வடக்கு டெல்லியில் உள்ள புராரி பகுதியை சேர்ந்த 14 வயது தலித் சிறுமி தயாசங்கர் என்பவரால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தயாசங்கரை கைது செய்தனர்.
இந்நிலையில் பலாத்கார வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு சென்றபோது சிறுமி மீண்டும் கடத்தப்பட்டு, பலாத்காரம் செய்யப்பட்டு, ஆசிட் போன்ற ஒன்றை கட்டாயப்படுத்தி குடிக்க வைக்கப்பட்டுள்ளார்.
பலி
ஆசிட் போன்ற பொருளால் சிறுமியின் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிர் இழந்தார்.
மகளிர் ஆணையம்
சிறுமி பலியானது குறித்து அறிந்த டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மலிவால் மத்திய, மாநில அரசுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்கள் பாதுகாப்பு பற்றி மத்திய, மாநில அரசுகள் மெத்தனமாக இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நிர்பயாக்கள்
இன்னும் எத்தனை நிர்பயாக்கள் டெல்லிக்கு தேவை? நாம் அனைவருமே அடுத்த நிர்பயா சாகும் வரை சும்மா காத்திருக்கிறோம் என்று மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி கோபத்தில் கொந்தளித்துள்ளார்.
ஏன்?
நிர்பயா இறந்த உடன் டெல்லியில் பெண்கள் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட சிறப்பு படையை உள்துறை அமைச்சகம் வாபஸ் பெற்றது வேதனையை அதிகரிக்கிறது என்று ஸ்வாதி கூறியுள்ளார். மேலும் சிறுமியின் வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு வடக்கு டெல்லி டிசிபிக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.