கொள்ளையடித்த பணத்தை வைத்து மோடியைத் தீர்த்துக் கட்ட திட்டமிட்ட சிமி கும்பல்
புவனேஸ்வர்: பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் தேவையான நிதியை, கொள்ளையடித்து சேகரித்துள்ளது சிமி கும்பல் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிஷா மாநிலத்தில் கடந்த வாரம் சில சிமி அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில்தான் இந்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து தீவிர விசாரணையை அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். கைதான 3 பேரும் கந்த்வா சிறையிலிருந்து தப்பி தலைமறைவாக இருந்து வந்த தீவிரவாதிகள் ஆவர்.

கந்தவா ஜெயில் பிரேக்
மத்தியப் பிரதேச மாநிலம் கந்தவா சிறைச்சாலையிலிருந்து கடந்த 2013ம் ஆண்டு ஐந்து முக்கிய சிமி தீவிரவாதிகள் தப்பினர். இவர்கள் நாட்டின் பல பகுதிகளில் பல தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

2 பேர் சுட்டுக் கொலை
இவர்களில் 2 பேரை கடந்த ஆண்டு போலீஸார் சுட்டுக் கொன்றனர். மற்ற 3 பேரும் சமீபத்தில் ஒடிஷா மாநிலம் ரூர்கேலாவில் வைத்து சிக்கினர்.

தீவிரவாதத்தை விட வழிப்பறியே அதிகம்
இவர்களிடம் நடத்திய விசாரணையின்போது தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதை விட அதிக அளவில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை ஆகியவற்றில்தான் அதிகம் ஈடுபட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு நிதி சேகரிக்க
இதற்குக் காரணம், தீவிரவாதத் தாக்குதலுக்குத் தேவையான பணத்துக்காக இப்படி திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். தெலுங்கானா, மத்தியப் பிரதேசத்தில் அதிக அளவில் இவர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளனராம்.

மற்றவர்களுக்குக் கொடுத்தனர்
இப்படி சம்பாதித்த பணத்தை சிமி அமைப்பைச் சேர்ந்த பிறரிடம் கொடுத்துள்ளனர். மேலும் வங்கிகள் பலவற்றில் நடத்திய கொள்ளை மூலம் கிடைத்த பணத்தை ராஞ்சியில் உள்ள தங்களது அமைப்பினருக்கு அனுப்பியுள்ளனர்.

மோடியை தீர்த்துக் கட்ட
இ்ந்தப் பணத்தைக் கொண்டுதான் பாட்னாவில் பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா தேர்தலுக்கு முன்பு பிரசாரத்திற்கு வந்தபோது குண்டு வைத்து கொலை செய்ய திட்டமிட்டனர். ஆனால் அது தோல்வியில் முடிந்தது.

பணமே இல்லாத நிலையில் கைது
கடந்த வாரம் ரூர்கேலாவில் போலீஸாரிடம் சிக்கியபோது இவர்களிடம் பணமே இல்லையாம். இவர்கள் 2013 -2014க்கு இடைப்பட்ட கால்தில் 3 வங்கிகளைக் கொள்ளையடித்துள்ளனர். அதில் தங்கம், பணம் என ரூ. 1.5 கோடி மதிப்பிலானவற்றை திருடியுள்ளனர்.

எல்லாம் எங்கே போச்சு
இவ்வளவு பெரிய பணத்தை இவர்கள் யார் யாரிடம் கொடுத்தனர். எது எதற்கெல்லாம் அது பயன்படுத்தப்பட்டது என்று தெரியவில்லை. அதுகுறித்து இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

ராஞ்சி, கந்த்வா
இந்தப் பணத்தை ராஞ்சி, கந்த்வா ஆகிய இடங்களில் உள்ள சிமி அமைப்பினர் பெற்று பின்னர் பல்வேறு தீவிராதிகளுக்கும் பகிர்ந்தளித்ததாக கூறப்படுகிறது.

ராஞ்சி குரூப்
ராஞ்சியில் உள்ள கும்பல்தா் பாட்னா மற்றும் புத்த கயா குண்டுவெடிப்புகளை திட்டமிட்டு நடத்தியதாகவும் தெரிய வந்துள்ளது. தற்போது இந்த ராஞ்சி கும்பலைக் குறி வைத்து விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்தக் கும்பலின் தலைவர் ஹைதர் அலி என்றும் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications