ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு செலவு ரூ. 5 கோடி: பணத்தை கர்நாடகாவிற்கு யார் கொடுப்பது?
பெங்களூர்: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கு மாற்றியது முதல், அந்த வழக்கை நடத்த இதுவரை 5 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. இந்த செலவை யார்? எப்படிக் கொடுப்பது என்பதுதான் இப்போதைய கேள்வி.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி டிகுன்ஹா தீர்ப்பளித்தார். மேலும் அவருக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
1996 ஆம் ஆண்டு தமிழகத்தில் போடப்பட்ட வழக்கு 2004ஆம் ஆண்டு பெங்களூரு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
ஒருநாள் செலவு
பத்தாண்டுகளாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றது. அரசு வழக்கறிஞருக்கு ஒரு நாளைக்கு ரூ.60,000 சம்பளம். நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று அதையே அபராதமாக விதித்த சம்பவமும் நடந்துள்ளது.
10 ஆண்டுகால வழக்கு
நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு இரு தினங்களுக்கு முன்பு வழங்கப்பட்டது. குற்றவாளிகள் 4 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் முதல்குற்றவாளியான ஜெயலலிதாவிற்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற மூவருக்கு தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ரூ. 5 கோடி செலவு
பத்தாண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கிற்காக கர்நாடக அரசுக்கு ரூ.5 கோடி செலவாகியுள்ளதாம். அந்தச் செலவை கர்நாடக அரசுக்கு தமிழக அரசு கொடுக்க வேண்டும்.
ஜெயலலிதா கட்டவேண்டும்
அந்தத் தொகையை தமிழக அரசு கட்டத் தவறினால், ஜெயலலிதா 1991-க்கு முன்பாக தனக்கு இருந்ததாகக் காட்டியுள்ள சொத்துகளை விற்று அந்த ஐந்து கோடியைக் கட்ட வேண்டும் என்கின்றனர்.