திக்திக்.. உத்தரகாண்ட் சுரங்கத்தில் இருந்து 41 தொழிலாளர்களை மீட்பது எப்படி தெரியுமா? இப்படித்தான்
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்கள் இன்னும் சற்று நேரத்தில் மீட்கப்பட உள்ளனர். இந்நிலையில் தான் சுரங்கத்தில் இருந்து 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கும் சவாலான பணி எப்படி நடக்கும் என்பது பற்றி தேசிய பேரிடர் மீட்பு படையின் உறுப்பினர் சையத் அதா ஹஸ்னைன் விவரித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சில்க்யாரா என்ற பகுதியில் சுரங்கம் தோண்டும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. அதாவது சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கிலோமீட்டர் தொலைவுக்கு பாதை ஏற்படுத்தும் வகையில் இந்த சுரங்கம் தோண்டப்பட்டது.

இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். கடந்த 12ம் தேதி திடீரென்று சுரங்கத்தில் மண்சரிவு ஏற்பட்டது. இதில் 41 தொழிலாளர்கள் சிக்கினர். அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் விரைந்து தொடங்கியது. 41 தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், ஆக்ஸிஜன் உள்ளிட்டவை குழாய்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
அதனை தொழிலாளர்கள் சாப்பிட்டு வரும் நிலையில் தேசிய பேரிடம் மீட்பு படையினர், மாநில தேசிய பேரிடர் மீட்பு படையினர், வெளிநாடுகளை சேர்ந்த சுரங்க மீட்பு நிபுணர்கள், தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மண்சரிவு ஏற்பட்ட இடம் என்பது நிலச்சரிவுக்கு ஏற்ற வகையில் உள்ளதால் இந்த பணி என்பது சுலபமாக அமையவில்லை.
முதலில் கிடைமட்டமாக துளை போட்டு மீட்கும் பணி தொடங்கியது. இது வெற்றி பெறவில்லை. இதையடுத்து சுரங்கத்தின் மேல் செங்குத்தாக துளை போட்டு குழாய் மூலம் மீட்கும் பணியும் சவால் நிறைந்ததாக அமைந்தது. மீட்பு பணிக்கான ஆகர் இயந்திரம் துளைபோட்டபோது அதன் முனைப்பகுதியில் கான்கிரீட் கம்பிகள் சிக்கின. இதனால் அந்த பணி முடங்கியது. அதன்பிறகு அந்த கான்கிரீட் கம்பிகள் அகற்றப்பட்டன. அதன்பிறகு பேரிடர் மீட்பு படையினர் துளைபோடும் பணியில் ஈடுபட்டனர். இன்னும் 2 மீட்டர் தொலைவு மட்டும் துளையிட வேண்டி உள்ளது. இது வெற்றிகரமாக நடைபெற உள்ளது.
இதையடுத்து சுரங்கத்தில் உள்ள 41 தொழிலாளர்களும் 17 நாட்களுக்கு பிறகு வெளியே வர உள்ளனர்.
இந்நிலையில் தான் சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்கள் மீட்கப்படுவது எப்படி? என்பது பற்றி தேசிய பேரிடர் மீட்பு படையின்( என்டிஆர்எப்) உறுப்பினரும், ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரலுமான சையத் அதா ஹஸ்னைன் விவரித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: மீட்பு பணியின் முக்கிய கட்டத்தை நெருங்கிவிட்டோம். 58 மீட்டர் வரையிலான தொலைவை நாங்கள் எட்டியுள்ளோம். இன்னும் 2 மீட்டர் தூரம் மட்டுமே பாக்கி உள்ளது. அங்குள்ள குப்பைகளை அகற்றி 2 மீட்டர் தொலைவை கடந்து தொழிலாளர்களை மீட்க உள்ளோம். இந்த மீட்பு பணி என்பது குழாய் மற்றும் இயந்திரத்தின் உதவியுடன் நடைபெற உள்ளது. தற்போது சுரங்கத்தில் சிக்கி உள்ளவர்கள் சத்தம் மீட்பு படையினருக்கு கேட்கிறது.
இந்த மீட்பு பணியின்போது மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் படுக்கைகள் (ஸ்ரெட்சர்கள்) பயன்படுத்தப்பட உள்ளது. இந்த படுக்கைகளில் சுரங்க தொழிலாளர்கள் படுத்தவுடன் அவர்கள் குழாய் மூலம் வெளியே மீட்கப்படுவார்கள். அதன்படி பார்த்தால் ஒரு நபரை சுரங்கத்தில் இருந்து மீட்க குறைந்தது 3 நிமிடம் முதல் அதிகபட்சமாக 5 நிமிடங்கள் வரை ஆகும். மொத்தம் 41 தொழிலாளர்களை முழுமையாக மீட்க 3 முதல் 4 மணிநேரம் எடுக்கும்.
தொழிலாளர்களை மீட்க சுரங்கப்பாதைக்குள் தேசிய பேரிடர் மீட்பு படையின் 3 குழுவினர் சென்றுள்ளனர். இவர்களுக்கு உதவ மாநில பேரிடர் மீட்பு படையினரும் உடன் சென்றுள்ளனர். மருத்துவர்களும் சுங்கப்பாதைக்குள் சென்றுள்ளனர். தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 41 படுக்கைகள் கொண்ட வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அறுவை சிகிச்சை நிபுணர்கள், இருதயம், மனநல சிறப்பு மருத்துவர்களின் குழுவும் தயாராக உள்ளனர்.
மேல் சிகிச்சை தேவைப்படும் தொழிலாளர்கள் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளனர். இதற்கு 3 ஹெலிகாப்டர்கள் தயாராக உள்ளன. மேலும் மீட்பு இடத்தின் அருகே சினூக் ஹெலிகாப்டர் தயாராக உள்ளது. ஆனால் இந்த சினூக் ஹெலிகாப்டர் மாலை 4.30 மணிக்குள் மட்டுமே இயங்கும். அதன்பிறகு காலதாமதம் ஏற்பட்டால் நாளை காலையில் தான் அந்த ஹெலிகாப்டரை பயன்படுத்தி தொழிலாளர்களை வேறு மருத்துவமனைக்கு முடியும். ஏனென்றால் இரவு நேரத்தில் சினூக் ஹெலிகாப்டர் பறப்பதற்கு ஏற்ற காலச்சூழல் என்பது இங்கு இல்லை. இதனால் அந்த ஹெலிகாப்டரை இரவில் அதனை பயன்படுத்த முடியாது.
ஆம்புலன்ஸ்கள் தயாராக நிறுத்தப்பட்டுள்ளன. மீட்பு பணியை வெற்றிகரமாக முடிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிக்கு முன்பே முன்கூட்டியே சில அறிவிப்புகளை வெளியிடக்கூடாது. ஏனென்றால் அது மீட்பு தொடர்பான கொள்கைளுக்கு எதிரானதாக கருதப்படும். இதனால் தான் தொழிலாளர்கள் மீட்பில் நாங்கள் அவசரம் காட்டவில்லை'' என்றார்.












Click it and Unblock the Notifications