உ.பி.யை சேர்ந்த லஷ்கர் தீவிரவாதி கைது.. பரபரப்பு பிண்ணனி தகவல்கள்
உத்தரபிரதேச மாநில இளைஞர் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பில் சேர்ந்தது எப்படி என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
லக்னோ: உத்தரபிரதேச மாநில இளைஞர் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பில் சேர்ந்தது எப்படி என்பது குறித்து தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநில போலீசார் தரப்பில் கூறுகையில், சந்தீப் குமார் ஷர்மா காஷ்மீரில் இயங்கிவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கிய நபராக இருப்பவர். இப்போது முஸாபர் நகரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தீப்பிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "முதல் முறையாக, பஷீர் லஷ்கரி என்ற லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதியை, போலீசார் என்கவுன்ட்டர் செய்தபோது, சந்தீப் சர்மா சிக்கினார். அவர், பஷீருடன், பத்போரா பகுதியில், ஒன்றாக தங்கியிருந்ததாகவும், தெரிகிறது.
அப்போது கிடைத்த தகவலின்பேரில், தீவிர விசாரணை செய்தபோது, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சந்தீப் கடந்த ஜனவரி மாதம், காஷ்மீருக்குச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் சில ஏடிஎம் பணத் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டார் சந்தீப். லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு, ஏடிஎம் மையங்களில் திருடி நிதி தரும் நபராக அவர் செயல்பட்டு வந்துள்ளார்.
மேலும் போலீஸ் நிலையங்கள், பாதுகாப்புப் படை முகாம்களை தாக்கி, சில ஆயுத திருட்டுச் சம்பவங்களிலும் சந்தீப் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது." என்று தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, சந்தீப்பிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.