அதிக முதலீட்டால் சுரங்க உரிமம் ரத்திலிருந்து விலக்கு கோர முடியாது: உச்சநீதிமன்றம்
டெல்லி: பெருமளவு முதலீடு செய்திருப்பதைக் காரணமாகக் கூறி, முறைகேடாகப் பெற்ற சுரங்க உரிமங்களை ரத்து செய்வதில் இருந்து தனியார் நிறுவனங்கள் விலக்குக் கோர முடியாது என்று நிலக்கரி முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.எல். லோதா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்பு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உரிய அனுமதி இன்றி நிலக்கரிச் சுரங்கங்களில் அதிக அளவு முதலீடு செய்ததற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களே பொறுப்பு என்று தெரிவித்தது. எவ்வளவு பெரிய தொகை முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்பது பொருட்டல்ல என்றும், தவறு செய்ததற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தொடர் விளைவுகளைச் சந்திக்கத்தான் வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இதுபோன்ற முதலீடுகள் அனைத்தும் வீணாகத்தான் போகும் என்றும், சட்டத்தால் கூட அந்நிறுவனங்களுக்கு உதவ முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. சட்டத்தில் குறிப்பிடப்பட்ட காலக்கெடுவுக்குள் உரிமம் பெறத் தவறிய நிறுவனங்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சுரங்கங்களுக்கு உரிமை கோர முடியாது என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்தது.
மேலும் இதுபோன்ற நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்வது குறித்து பதில் அளிக்கும்படியும் மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
நிலக்கரி ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில், மேற்குவங்கம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திரம், ஒடிஸா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய 7 மாநிலங்களில் நடைபெற்றுள்ள சுரங்க ஒதுக்கீடு குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு 7 மாநிலங்களும் தங்களது பதிலை தாக்கல் செய்தன.
இதில் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களான ஆந்திரம், மகாராஷ்டிரம் ஆகியவை நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தையும் மத்திய அரசே செய்ததாகவும், மாநில அரசு இதில் சிறிய அளவு மட்டுமே பங்காற்றியதாகவும் தெரிவித்தது. மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிஸா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களும் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேட்டிற்கு மத்திய அரசே காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தன.












Click it and Unblock the Notifications