ஹைதராபாத் திருமண விழாவில் சிக்கனுக்காக அடிதடி... இளைஞர் கொலை.. 15 பேர் மீது வழக்குப்பதிவு!
ஹைதராபாத்தில் திருமண விழாவில் இளைஞர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
ஹைதராபாத்: நிச்சயதார்த்த விழாவில் சிக்கன் எடுத்து வருவது தொடர்பான சண்டையில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஹைதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் சார்மினார் அருகே உள்ள ஹூசைனி ஆலம் பகுதியில் கடந்த வாரம் திருமண விழா ஒன்று நடைபெற்றது. திருமணத்திற்கு முன் தினம் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவில் அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன.
அப்போது, பந்தியில் அமர்ந்திருந்தவர்களுக்கு சிக்கன் கிரேவி எடுத்து வர தாமதமானதாகக் கூறப்படுகிறது. பொறுமை இழந்த சிலர், கோபத்தில் சத்தமிட்டுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பு மண்டபத்தில் இருந்து வேகமாக வெளியேறியது.
பின்னர் சிறிது நேரத்திற்குப் பின், கோபமாக வெளியேறியவர்கள் 15 பேர் கொண்ட கும்பலாக கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மண்டபத்திற்கு திரும்பி வந்து பிரச்சினை செய்துள்ளனர். திருமணத்திற்கு வந்திருந்தவர்களை சரமாரியாக அவர்கள் தாக்கியுள்ளனர். சிறிது நேரத்தில் தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
இந்தத் தாக்குதலில் அன்வர் என்ற இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்டார். மற்றொரு இளைஞரான சோஹாயிலுக்கும் படுகாயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், சோஹாயிலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவல்களில் அடிப்படையில் 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று பேர் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாகவும், மற்றவர்களைத் தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிக்கன் கிரேவிக்காக நடந்த சண்டையில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தால், திருமண மண்டபம் களை இழந்து சோகத்தில் ஆழ்ந்தது.