சத்யம் கம்ப்யூட்டர் மோசடி வழக்கு... 26-ம் தேதி தீர்ப்பு- சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு
ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன மோசடி வழக்கில் வரும் ஜூன் 26-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என ஹைதராபாத் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிதிமோசடி வழக்கை அத்தனை சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது.
ரூ 14 ஆயிரம் கோடிக்கு மேல் பங்குதாரர்களுக்கு இழப்பையும், பல ஆயிரம் பணியாளர்கள் வேலை இழப்பையும் ஏற்படுத்திய மோசடி அது.
இப்போது நிறுவனம் இல்லை. அது மஹிந்திரா நிறுவனத்துக்கு கைமாறி, மகிந்திரா சத்யம் ஆகிவிட்டது.

மோசடி
ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில், பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி முறைகேடு நடந்ததை அதன் நிறுவனரும் தலைவருமான ராமலிங்க ராஜூவே 2009, ஜனவரி மாதம் ஒப்புக் கொண்டு அறிக்கை வெளியிட்டார்.

கைது
இந்த மோசடி அம்பலத்துக்கு வந்த இரு தினங்களில் ராமலிங்க ராஜு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் அவர் தம்பி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் குறித்த நேரத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், ராமலிங்க ராஜூ உள்பட அனைவரும் விடுதலையாகிவிட்டனர்.

5 ஆண்டுகள்...
ஹைதராபாத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இவ்வழக்கில் அரசுத் தரப்பில் மொத்தம் 216 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

மறுப்பு
குற்றத்தை முதலில் ஒப்புக் கொண்டு அறிக்கை தந்த அதே ராமலிங்க ராஜு, விசாரணையின் போது அதை மறுத்தார். சிபிஐ வழக்கை ஜோடித்ததாகக் கூறினார். தான் நிரபராதி என்று இப்போது கூறி வருகிறார்.

தீர்ப்பு நாள்
இறுதிக்கட்ட விசாரணை கடந்த வாரம் நிறைவடைந்தையடுத்து தீர்ப்பு வழங்கும் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தீர்ப்பு ஜூன் 26-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சக்ரவர்த்தி அறிவித்தார். தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்ட போது, சத்யம் ராமலிங்க ராஜு உள்பட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.












Click it and Unblock the Notifications