ஹைதராபாத் மத்திய பல்கலை. விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை
ஹைதராபாத்: ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் பிரவீன் அவரது விடுதி அறையில் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தவர் பிரவீன். இன்று காலை விடுதியில் எல் பிளாக்கில் உள்ள அறை எண் 203-ல் அவர் தூக்கில் தொங்கியடி இருந்தார்.
இது தொடர்பாக சக மாணவர்கள் விடுதி மருத்துவ அலுவலகத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்த மருத்துவர் உடனடியாக விரைந்து பிரவீனை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரவீன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர். தற்கொலை செய்து கொண்ட பிரவீன் மகபூப்நகர் மாவட்டம் சத்நகரைச் சேர்ந்தவர். கடந்த ஜனவரி 17-ந் தேதி ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை செய்து கொண்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.