ஹைதராபாத் பல்கலை. துணைவேந்தரின் அலுவலகம், வீடு சூறை.. மாணவர்கள் ஆவேசம்!
ஹைதராபாத்: ரோஹித் வெமுலா தற்கொலைக்கு நீதி கேட்டு ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக துணை வேந்தரின் அலுவலகம் மற்றும் வீட்டை தாக்கியுள்ளனர்.
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி. படித்து வந்த தலித் மாணவர் ரோஹித் வெமுலா ஏபிவிபி தலைவரை தாக்கியததாகக் கூறி அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் கடந்த ஜனவரி மாதம் விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
வெமுலா விவகாரத்தை பல்கலைக்கழக துணை வேந்தர் அப்பாராவ் கையாண்ட விதம் சரியில்லாததால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக மாணவர்கள் தெரிவித்தனர். வெமுலாவின் மரணத்தை அடுத்து அப்பாராவ் இரண்டு மாதம் விடுப்பில் சென்றார்.
இந்நிலையில் அவர் இன்று மீண்டும் பணிக்கு திரும்பினார். அப்பாராவ் பணிக்கு திரும்பியதை கண்டித்து மாணவர்கள் அவரின் அலுவலகம் மற்றும் வீட்டை தாக்கினர். அலுவலகத்திற்குள் புகுந்த மாணவர்கள் அங்கிருந்து மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். மேலும் ஜன்னல் கண்ணாடிகளை நொறுக்கினர்.
துணை வேந்தர் அப்பாராவ் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.