சபாஷ்.. கேஜ்ரிவால்- பேடி நேருக்கு நேர் விவாதிக்க முடிவு! அனல் பறக்கிறது டெல்லி தேர்தல் களம்!!
டெல்லி: தலைநகர் டெல்லி சந்தித்துவரும் பிரச்சினைகள் குறித்து என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என்று பாஜகவின் முதல்வர் வேட்பாளர் கிரண்பேடிக்கு, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் அழைப்புவிடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்க தயார் என்று கிரண்பேடியும் பதிலுக்கு சவால் விடுத்துள்ளார்.
முன்னாள் அரசு ஊழியர்களான இவ்விருவருக்கும் நடுவே தொடங்கியுள்ள வார்த்தை யுத்தத்தால் டெல்லி அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தபோதும், ஆட்சியமைக்கும் அளவுக்கு பலம் கிடைக்கவில்லை. எனவே இரண்டாவதாக வந்த ஆம்ஆத்மியும், மூன்றாம் இடம்பிடித்த காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்தன. கேஜ்ரிவால் முதல்வரானார். ஆனால், 49 நாட்களிலேயே, பதவியை ராஜினாமா செய்து அமைச்சரவையை கலைத்தார், அரவிந்த் கேஜ்ரிவால்.
ஒரே குரூப்
இதன்பிறகு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிலையில், அடுத்த மாதம் டெல்லி சட்டசபைக்கு பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாஜக முதல்வர் வேட்பாளராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடி களமிறக்கப்பட்டுள்ளார்.
இவர் அன்னா ஹசாரேவுடன் இணைந்து ஊழலுக்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுத்து வந்தவராகும். கேஜ்ரிவாலும் அதேபோன்ற போராட்டங்களை முன்னெடுத்தவர்தான்.
விவாதத்துக்கு தயாரா?
ஒரே சித்தாந்தங்கள் கொண்ட இருவர் எதிரெதிர் துருவங்களாக களம் காண்பதால் டெல்லி தேர்தல் களம், இந்த குளிர்காலத்திலும், சூடாகியுள்ளது. இதனிடையே, கிரண்பேடியிடம் டெல்லி சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து 2 மணி நேரம் விவாதம் நடத்த வேண்டியுள்ளது. அதற்கு அவர் தயாரா என்று கேஜ்ரிவால் சவால் விடுத்தார்.
நான் எப்போவோ தயார்!
உடனடியாக இந்த சவாலுக்கு கிரண்பேடியிடமிருந்து பதிலும் வந்துள்ளது. விவாதம் நடத்த தயார் என்று கிரண்பேடி கூறியுள்ளார். அதே நேரம் கேஜ்ரிவால் விவாதம் நடத்துவதிலேயே கவனமாக இருப்பவர் என்றும், நான், செயல்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன் என்றும் தாக்கியுள்ளார் கிரண் பேடி.
சபாஷ்..
பொதுவிவாதம் நடைபெறும் தேதி, இடம் பிறகு முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் இருவரின் மோதலை பார்த்து சபாஷ் சரியான போட்டி என்று ஆரவாரிக்கின்றனர் டெல்லிவாசிகள்.