அரசு ஊழியர்களுக்கு விரைவில் குட் நியூஸ்? 21 மாத கோடிக்கணக்கான நிலுவை தொகையில் தமிழக அரசு முடிவு?
சென்னை: அரசு ஊழியர்களின் வாழ்வாதாரப் போராட்டமாக நீடித்து வரும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) முதன்மையாகக் கொண்டு தங்கள் 10 முக்கியக் கோரிக்கைகளை ஜாக்டோ ஜியோ பேரமைப்பு முன்வைத்துள்ளனர்.. புதிய தவெக அரசு தங்களின் இந்த நியாயமான நீண்டகாலக் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் எனப் பேரமைப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர். இது ஒட்டுமொத்த அரசு ஊழியர்களின் கவனத்தை பெற்று வருகிறது.
கடந்த 2021 தேர்தலில் திமுக அளித்த OPS அதாவது பழைய பென்ஷன் திட்டம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாமல் அதற்கு மாற்றாக TAPS திட்டத்தை அறிவித்ததும், தவெக தனது அறிக்கையில் OPS குறித்துப் பரிசீலிப்பதாக தெரிவித்ததும் அரசு ஊழியர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டன.

தமிழக அரசு மீண்டும் ஜாக்பாட் தருமா
அத்துடன் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களால் ஏற்பட்ட பணிச்சுமை, இடைநிலை ஆசிரியர்களின் 'சம வேலைக்கு சம ஊதியம்' கோரிக்கை, அங்கன்வாடி மற்றும் ரேஷன் கடை ஊழியர்களின் தீர்க்கப்படாத போராட்டங்கள் போன்ற நிர்வாக ரீதியிலான அதிருப்திகளும் நிலுவையில் உள்ள கோரிக்கைகளும் சேர்ந்து, இந்த முறை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் தபால் வாக்குகளை திமுக, அதிமுக, மற்றும் தவெக என மூன்று முனைகளாகப் பிரித்தெழுதும் ஒரு புதிய அரசியல் சூழலை உருவாக்கி உள்ளன.
இந்நிலையில், தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய்க்கு ஜாக்டோ ஜியோ பேரமைப்பு தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது..
இதோ 10 கோரிக்கைகள்
அதில், "1.4.2003க்குப் பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் உடன் அமல்படுத்திட வேண்டும்.
ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) குறித்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை காரணம் காட்டி 23.08.2010க்கு முன்னதாகப் பணியேற்ற ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலில் இருந்து (TET தேர்விலிருந்து விலக்களித்து) ஆசிரியர்களை பாதுகாத்திட தமிழ்நாடு அரசு சீராய்வு மனு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும்.
தொடக்கக் கல்வித்துறையில் பணி புரியும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண்.243 மற்றும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறையில் அரசாணை எண்.76 ஆகியவற்றை உடனடியாக ரத்து செய்திட வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ்
முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக் களைய வேண்டும். கல்லூரி பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணிமேம்பாடு (CAS) ஊக்க ஊதிய உயர்வு உடனடியாக வழங்கிட வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் MRB செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், அரசு தொழிற்பயிற்சி நிலைய PPP & COE ஊழியர்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும்.
காலிப் பணியிடங்கள் - தொகுப்பூதியம்
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.
அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்துக்கும் மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பினை 5 சதவீதமாக குறைக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக வழங்கிட வேண்டும்.
21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் ஆகியோருக்கு உடனடியாக வழங்கிட வேண்டும்.
2002 முதல் 2010 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் பணிக் காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்.
சாலைப்பணியர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications