மதவாத சக்திகளை விரட்டவே நான் வெளியே வந்துள்ளேன் : ஜாமீனில் வந்த லாலு ஆவேசம்
ராஞ்சி: மதவாத சக்திகளை களையெடுப்பதே இனி என் வேலை. சிறைக்குச் சென்றதோடு என் கதை முடிந்து விட்டது என சிலர் தவறாக எண்ணி விட்டார்கள் என ஜாமீனில் விடுதலையான ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து அக்டோபர் மாதம் 3ம் தேதி அவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. கைதான லாலுவின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில் லாலு ஜாமீன் கோரி உச்ச நீதின்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் பிர்சா முண்டா சிறையில் இருந்து நேற்று வெளியே வந்தார்.
சிறை வாசலில் நின்று கொண்டிருந்த ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி நிர்வாகிகள் லாலுவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சிறையின் முக்கிய வாயில் வழியே வெளியே வந்த லாலு, சிறை வளாகத்தில் இருந்த பழங்குடியின தலைவரின் சிலைக்கு மாலை அணிவித்தார்.
பின்னர் அங்கு கூடியிருந்த நிருபர்களிடம் லாலு தெரிவித்ததாவது:-

மதவாத சக்திகள்...
டெல்லியில் வலுவாக காலூன்ற மதவாத சக்திகள் முயற்கின்றன. அவர்களை விரட்டியடிப்பதற்காக நான் வந்துவிட்டேன். நரேந்திர மோடியோ, பாஜக அல்லது ஆர்எஸ்எஸ் அமைப்போ தங்களின் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள இடம்தரமாட்டோம்.

சுற்றுப் பயணம்....
அஸ்தினாபூரில் இருந்து மதவாத சக்திகள் வெளியேற்றப்படுவார்கள். மத சார்பற்ற சக்திகளை வலுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் பயணம் செய்யப் போகிறேன்' என்றார்.

என் கதை தொடரும்....
அதனைத் தொடர்ந்து அவர் ராஞ்சியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தியோரி கோயிலுக்கு சென்றார். கோயில் அருகில் அங்கு கூடியிருந்த தொண்டர்களிடையே லாலு பேசுகையில், "நான் சிறைக்கு சென்றவுடன் எனது கதை முடிந்துவிட்டதாக சிலர் நினைத்தார்கள்.

லாலு பஞ்ச்....
சமோசாவில் ஆலு (உருளைக்கிழங்கு) இருக்கும் வரை பீகாரில் இந்த லாலு இருப்பான் என்பதை அவர்கள் நினைவில் கொள்ளவேண்டும். நரேந்திர மோடிக்கு பின்னால் தொழிலபதிபர்கள் உள்ளனர். மதவாத சக்திகளிடம் இருந்து மக்கள் விலகியிருக்க வேண்டும்.

பாடம் புகட்டுவோம்....
வரும் தேர்தலில் பீகாரில் பாஜகவுக்கும், அதன் கூட்டணியில் இருந்து பிரிந்த சென்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications