எனக்கு எதற்காக பத்வா விடப்பட்டது?: தஸ்லிமா நஸ்ரின் விளக்கம்
டெல்லி: லஜ்ஜா நாவலில் தான் இஸ்லாத்தை விமர்சிக்கவில்லை என்று வங்கதேச எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நான் எனது லஜ்ஜா நாவலில் இஸ்லாத்தை விமர்சித்துள்ளதாக பலர் நினைக்கிறார்கள். வங்கதேசத்தை சேர்ந்த முஸ்லிம்கள் எனக்கு எதிராக பத்வா விட்டதாக கூறுவது தவறு. நான் லஜ்ஜாவில் இஸ்லாத்தை விமர்சிக்கவும் இல்லை அதற்காக எனக்கு பத்வா விடவும் இல்லை. நான் பிற புத்தகங்களில் இஸ்லாத்தை விமர்சித்ததற்காக தான் பத்வா விடப்பட்டது.

மதத்தின் பெயரில் உலகில் நடக்கும் வன்முறை, கொலைகளை எதிர்த்து தான் லஜ்ஜாவில் எழுதினேன். லஜ்ஜா மதம் பற்றியோ வெறுப்பு பற்றியோ பேசவில்லை. மாறாக மனிதநேயம் மற்றும் அன்பு பற்றி பேசுகிறது என்றார்.
கடந்த 1993ம் ஆண்டு எழுதப்பட்ட லஜ்ஜாவுக்கு வங்கதேசத்தில் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அந்த நாவல் உலக அளவில் சக்கை போடு போட்டது. நாவலில் தஸ்லிமா இஸ்லாத்தை விமர்சித்ததாக கூறி அவருக்கு கடந்த 1994ம் ஆண்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறினார்.
அதில் இருந்து வெளிநாடுகளில் வாழும் தஸ்லிமா தற்போது ஸ்வீடன் நாட்டு குடிமகள். இந்நிலையில் தஸ்லிமா வரும் 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை தங்க இந்தியா அவருக்கு ஓராண்டுக்கு விசா அளித்தது.
முன்னதாக தஸ்லிமா இந்தியாவில் அதிலும் குறிப்பாக கொல்கத்தாவில் செட்டிலாக விருப்பம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications