2 முறை பிரதமர்.. 3 முறை முதல்வர்! என் பெயரில் சொந்த வீடு கூட இல்லை! ஆனால்.. பெருமையாக சொன்ன மோடி!
காந்திநகர்: நாட்டின் பிரதமராக இருந்தாலும் கூட எனது பெயரில் சொந்தமான வீடு இல்லை என குஜராத்தில் ரூ.5,206 கோடி மதிப்பிலான திட்டத்தை தொடங்கி வைத்து நரேந்திர மோடி பேசி கவனத்தை ஈர்த்தார்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத் சென்றார். நேற்றைய 2வது நாள் பயணத்தின்பாது குஜராத்தில் ரூ.5,206 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் சோட்டா உதேபூரில் நடந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று புதிய வகுப்பறைகள், கணினி ஆய்வகங்கள், நவோதயா வித்யாலயா, 22 மாவட்டங்களில் 7,500 கிராமங்களில் 20 லட்சம் பேர் பயன்பெறும் வகையில் கிராம வை-பை திட்டம் உள்பட ஏராளமான பணிகளை தொடங்கி வைத்தார்.
அதன்பிறகு அங்கு நடந்த விழாவில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் தனது பெயரில் சொந்தமாக வீடு கூட இல்லை என அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடி பேசியதாவது: நான் உங்களுடன் (குஜராத் மக்கள்) அதிக நேரம் செலவிட்டு இருக்கிறேன். ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் ஏழை மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்டு அவற்றை சரி செய்ய முயற்சித்து வந்திருக்கிறேன்.
நாடு முழுவதும் 4 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளை மக்களுக்காக எனது தலைமையிலான அரசு கட்டி கொடுத்து உள்ளது. முந்தைய ஆட்சியில் வீடு என்பது வெறும் எண்ணிக்கை என்ற அளவில் மட்டுமே இருந்தன. ஆனால் அது என்னை பொறுத்தவரை சுயமரியாதைக்கானது. அதோடு இடைத்தரகர்கள் இன்றி ஏழை மக்களுக்காக வீடுகளை கட்டி கொடுத்து இருக்கிறோம்.
பெண்களின் பெயரில் லட்சக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் எனது பெயரில் சொந்தமாக ஒரு வீடு இல்லை. ஆனாலும் எனது அரசு லட்சக்கணக்கான மகளிரை, வீட்டு உரிமையாளர்களாக மாற்றி இருக்கிறது. புதிய கல்விக் கொள்கை, 30 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. தற்போதைய அரசு அதனை நிறைவேற்றி இருக்கிறது.
நான் முதலமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்பாக குஜராத்தில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் அறிவியல்சார் பள்ளிகள் இல்லை. அறிவியல்சார் பள்ளிகள் இல்லாமல் எவ்வாறு மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர முடியும்?'' என கேள்வியும் எழுப்பினார். தற்போது அங்குள்ள பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது 2வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக உள்ளார். அதற்கு முன்பாக அவர் குஜராத் முதல்வராக 4 முறை செயல்பட்டார். கடந்த 2001 முதல் 2014ம் ஆண்டு 12 ஆண்டுகள் 227 நாட்கள் குஜராத் முதல்வராக இருந்தார். இதனால் அவருக்கு குஜராத் மக்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. இந்நிலையில் தான் தனக்கு சொந்தமாக வீடு இல்லை என அவர் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications