தினமும் கோமியம் குடிப்பேன்-கொரோனா தாக்கவில்லை- மீண்டும் சர்ச்சையில் பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர்
போபால்: தாம் தினமும் பசு கோமியம் குடிப்பதால் தம்மை கொரோனா தாக்கவில்லை என்று பாரதிய ஜனதா கட்சி எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையாகி உள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.6 லட்சமாக குறைவு- ஒருநாள் உயிரிழப்பு 4,340 ஆக அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா 2-வது அலை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை இல்லாத வகையில் ஒருநாள் பாதிப்பு 4 லட்சத்தில் இருந்து தற்போது 2.61 லட்சம் என்ற நிலையில் உள்ளது. ஒருநாள் கொரோனா மரணங்கள் 4,000-த்தை தாண்டியுள்ளது.
மரணங்கள் மறைப்பு
வட இந்தியாவில் அடிப்படை மருத்துவ கட்டமைப்புகள் இல்லாததால் கொரோனா மரணங்கள் அதிகரித்திருக்கின்றன; ஆனால் இந்த மரணங்கள் தொடர்பான விவரங்கள் மறைக்கப்படுகின்றன என்கிற புகாரும் உள்ளது.
மாட்டு சாணி குளியல்
அதேநேரத்தில் கொரோனாவை மாட்டு சாணி குணப்படுத்துகிறது என்கிற சாணி குளியல் நடத்துகிற கூத்துகளும் வட இந்தியாவில் நடக்கின்றன. அதேபோல் கோமியம் குடித்தால் கொரோனா வராது என்கிற கருத்தை பாஜக எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். இந்த கருத்துகளுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டும் வருகின்றன. இத்தகைய சாணி குளியல், புதிய கறுப்பு பூஞ்சை தாக்குதல்களுக்கு காரணமாகிவிடும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
கோமியம்- பிரக்யாசிங்
இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நிகழ்ச்சி ஒன்றில் பாஜகவின் சர்ச்சைக்குரிய எம்.பி. பிரக்யா சிங் தாகூர், தினமும் கோமியம் குடிக்கிறேன். அது ஆசிட் போல நுரையீரலில் உள்ள தொற்றுகளை அகற்றிவிடுகிறது. தினமும் கோமியம் குடித்து வருவதால் கொரோனாவுக்கு என எந்த மருந்தையும் நான் எடுப்பதும் இல்லை.
கோமியல் குடித்தால் நோய் வராது
நாட்டு பசுவின் கோமியத்தை குடிப்பதால் வேறு மருந்துகளை நான் சாப்பிடுவதும் இல்லை. பசுமாட்டு கோமியத்தை கடவுளை பிரார்த்தித்து குடித்தால் நமக்கு எந்த நோயும் வராது. வேம்பு, ஆலமரம், துளசி போன்றவற்றை நட்டிருக்க வேண்டும். இவற்றை முறையாக நாம் நட்டிருந்தால் இன்று நாடு ஆக்சிஜன் பற்றாக்குறையை எதிர்கொண்டிருக்காது என்றார்.
கோமியம் குடிப்பது சரியே
பிரக்யாசிங் தாக்கூரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்த போதும், எனக்கு கொரோனா பாதிப்பு வரவில்லை. நான் தினமும் கோமியம் குடிப்பதால்தான் எனக்கு கொரோனாவரவில்லை என நினைக்கிறேன் என்றார் பிரக்யாசிங் தாக்கூர்.