ஜல்லிக்கட்டு வழக்கை வாபஸ் பெற முடியாது: விலங்குகள் நல வாரிய வக்கீல் அஞ்சலி சர்மா
ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெறப்போவதில்லை என விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் அஞ்சலி சர்மா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டெல்லி: ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்துள்ள வழக்கை வாபஸ் பெற முடியாது என விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் அஞ்சலி சர்மா கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது தமிழக அரசு. இதன் பின்னர் சட்டசபையில் நிரந்தர சட்டத்துக்கான மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து பிராணிகள் நல வாரியத்தின் வழக்கறிஞராக செயல்பட்டு வரும் அஞ்சலி சர்மா தனிப்பட்ட முறையில் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் தமிழக அரசு நிறைவேற்றியுள்ள புதிய சட்டம், மத்திய அரசின் மிருகவதை தடுப்பு சட்டத்துக்கு எதிரானது என்பதால், அதை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதனிடையே, அஞ்சலி சர்மா தாக்கல் செய்த மனு வாரியத்தின் அனுமதி பெறாமல் தாக்கல் செய்தது எனத் தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக வாபஸ் பெறக்கோரி விலங்குகள் நல வாரியத்தின் செயலாளர் ரவிக்குமார், வழக்கறிஞர் அஞ்சலி ஷர்மாவுக்கு புதன்கிழமை ஒரு கடிதம் அனுப்பி இருந்தார்.
அக்கடிதத்தில் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக எந்த ஒரு வழக்கு தொடர்ந்திருந்தாலும் அதை திரும்பப் பெற வேண்டும்; விலங்குகள் நல வாரியத்தின் சார்பாக எந்த வழக்கு தொடர்ந்தாலும் வாரியத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், அஞ்சலி சர்மா கூறுகையில், தமிழக அரசின் அவசரச்சட்டத்தை எதிர்த்து நான் மனு தாக்கல் செய்யவில்லை, கடந்த 2016ம் ஆண்டு தாக்கல் செய்த மனு மீதான இடைக்கால மனுதான்.
இதை விலங்குகள் நலவாரியத்தின் அனுமதியில்லாமல் தாக்கல் செய்யவில்லை, அனுமதியோடுதான் தாக்கல் செய்தேன். இதில் வாரியத்தின் செயலாளர் கடிதம் சட்டப்பூர்வமாக என்னை தடுக்காது எனத் தெரிவித்துள்ளார். இருப்பினும் அஞ்சலி சர்மா, அந்த மனுவை வாபஸ் பெற முடியாது என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications