உ.பி, பீகார், மே.வங்கம், தமிழகத்தில் பாஜக தடம் பதிக்கும்: அமித்ஷா நம்பிக்கை
மும்பை: உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய மிகப்பெரிய நான்கு மாநிலங்களில் பாஜக தனது தடத்தை அழுத்தமாக பதிக்கும் பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாஜகவின் தேசியத் தலைவர் பதவி என்பது தமக்கு இன்னமும் நிறைவு பெறவில்லை என்றும், இந்த நான்கு மாநிலங்களிலும் பாஜக தடம் பதித்தால்தான், தமது பாஜக தேசியத் தலைவர் பதவி நிறைவடையும் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி மத்தியில் பெரும்பான்மையோடு ஆட்சி அமைய காரணமாக அமைந்தவர் அமித்ஷா. இந்த வெற்றிக்குப் பரிசாக 50 வயதில் அவருக்கு பாஜக தேசிய தலைவர் பதவி தேடி வந்தது. இதே வேகத்தோடு, மகாராஷ்டிரா, ஹரியானா மாநில தேர்தல்களில் வெற்றி வாகை சூடியது.
இதே வெற்றியோடு அடுத்தடுத்த மாநிலங்களில் தனது பார்வையை பதிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது பாஜக. இந்த வெற்றியை அடைவதே தனது லட்சியம் என்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில், தெரிவித்துள்ளார் அமித்ஷா.

மோடிக்கு கிடைத்த வெற்றி
வானத்தில் உள்ள சூரியனைப் போன்றவர் பிரதமர் மோடி. அவரது ஒளியைப் பெற்றுதான் நாங்கள் பிரகாசிக்கிறோம்.
நடந்து முடிந்த மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களின் வெற்றி என்பது முழுக்க முழுக்க மோடிக்கு கிடைத்த வெற்றி என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.

எல்லாம் ஈஸ்வர்தான்
தனது 32 ஆண்டுகால அரசியல் பயணத்தில் பாஜகவின் சாதாரண தொண்டனாக இருந்து இன்றைக்கு தேசிய தலைவராக உயர்ந்ததற்குக் காரணம் அந்த ஈஸ்வரின் கருணைதான் என்று கூறியுள்ளார் அமித்ஷா.

நான்கு மாநிலம் லட்சியம்
மேற்கு வங்கம், பீகார், உத்தரபிரதேசம், தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களிலும் பாஜகவின் தடத்தை அழுத்தமாக பதிக்கவேண்டும் என்பதே பாஜகவின் லட்சியம். இந்த லட்சியம் நிறைவேறினால்தான் பாஜக தேசிய தலைவர் என்ற பதவியை எனக்கு அளித்ததற்கான லட்சியம் பூர்த்தி அடையும். இதற்காக என்னுடைய முழு உழைப்பையும் வழங்குவேன்.

கூட்டணி வியூகம்
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கூட்டணி அமைப்பது என்றால் மாநிலத்தின் கள ஆய்வு என்பது மிகத் திறமையான முறையில் இருக்க வேண்டும் என்றும், எதிர்த்து நிற்பவரின் பலம் என்ன என்பது முழுமையாகத் தெரிந்த கொண்ட பின்னர் பாஜக பிரமுகரை நிறுத்த வேண்டும் என்பது மகாராஷ்டிரத் தேர்தல் கற்றுக்கொடுத்த பாடம் என்று கூறியுள்ளார்.

மராட்டியம் கற்றுத்தந்த பாடம்
கூட்டணி வியூகம் அமைப்பது என்பது மிக முக்கியமான அம்சம் என்று மகாராஷ்டிரத் தேர்தல் தங்களுக்கு பாடம் கற்பித்து உள்ளதாக, அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மேலும், மாநிலங்களுடனான கூட்டணிக்கு சிறந்த வியூகம் அமைப்பது என்பது மிக முக்கியமானது என்றும் சமீபத்தியத் தேர்தல் கற்றுக்கொடுத்து உள்ளதாகவும் கூறியுள்ளார் அமித்ஷா.












Click it and Unblock the Notifications