சர்ச்சையில் சிக்கிய சுஷ்மா, வசுந்தர ராஜே ராஜினாமா செய்ய போர்க்கொடி தூக்குகிறார் அத்வானி!!
டெல்லி: தேடப்படும் குற்றவாளி லலித் மோடிக்கு உதவிய சர்ச்சையில் சிக்கியுள்ள மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரராஜே சிந்தியா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மறைமுகமாக வலியுறுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டது முதலே கலகக் குரல் எழுப்பி வருபவர் அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி. பின்னர் நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் கிடைக்காமலும் கட்சியில் 'முதியோர் குழு'வுக்குள் தள்ளிவிடப்பட்டபோதும் மவுனம் காத்து வந்தார் அத்வானி.

இந்த நிலையில் 2017ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலிலும் கூட தமக்கு வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்தவராக பாரதிய ஜனதா மற்றும் மத்திய அரசு மீது விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளர் அத்வானி. அண்மையில் எமர்ஜென்சி குறித்து அத்வானி தெரிவித்த கருத்துகள் அனைத்துமே மோடியை மனதில் வைத்துதான் என பரபரப்பு எழுந்தது.
சுஷ்மா, வசுந்தராவுக்கு எதிராக..
தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கும் சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தரராஜே சிந்தியா ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக ஒரு பேட்டியளித்துள்ளார் அத்வானி.
மக்கள் நம்பிக்கை அவசியம்
பெங்காலி பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் அத்வானி கூறியுள்ளதாவது:
அரசியல்வாதிக்கு, மக்கள் மத்தியில் நம்பிக்கையானது இருக்கவேண்டும் என்பது மிகவும் பெரிய பொறுப்பு ஆகும். அறநெறி வலியுறுத்துவது என்னவென்றால் ராஜ்தர்மா மற்றும் பொதுவாழ்க்கையில் நேர்மையை கடைபிடிப்பது அவசியம் என்பதாகும்.
கருத்து இல்லை.
லலித் மோடிக்கு சுஷ்மா மற்றும் வசுந்தர ராஜே உதவிசெய்த சர்ச்சைக்குரிய விவகாரத்தில் நான் விலகியேஉள்ளேன். இதுதொடர்பாக கருத்து தெரிவிக்க என்னிடம் எதுவும் கிடையாது.
நானெல்லாம் ராஜினாம செய்தேன்..
1996ஆம் ஆண்டு ஜெயின் டைரியை அடிப்படையாக கொண்டு ஹவாலா விவகாரத்தில் என் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. அதே நாள் மாலை எனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்தேன். இது வேறு யாருடைய முடிவும் கிடையாது. என்னுடையது. என்னுடைய முடிவை வாஜ்பாயிடம் தெரிவித்தேன். அவர் என்னை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் நான் இவ்விவகாரத்தில் யாருடைய பேச்சையும் அப்போது கேட்கவில்லை.
இவ்வாறு அத்வானி கூறியுள்ளார்.
இதன் மூலம் சுஷ்மாவும் வசுந்தரராஜேவும் தம்மைப் போலவே ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்ற கருத்தை அத்வானி வலியுறுத்துவதாக சலசலப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications