மலையாளியாக மட்டுமல்ல, கன்னடராகவும் ஆசைப்பட்டவர்தான் கமல்!
பெங்களூர்: தன்னை ஒரு மலையாளி என்று அழைத்து கேரள முதல்வர் பிணராயி விஜயனுக்கு 'செவாலியர்' கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அவர் ஏற்கனவே கன்னடராக ஆசைப்படுவதாக கருத்து கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தவர் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அதுவும் சென்னையில் நடந்த விழாவில் இவ்வாறு கமல் கூறியிருந்ததுதான் கவனிக்கத்தக்கதாக அதை மாற்றியது.
3 வருடங்கள் முன்பு சென்னையில் இந்திய திரைப்பட நூற்றாண்டு விழா நடைபெற்றபோது கமல் மேடையில் இவ்வாறு கூறியிருந்தார். அவர் கூறுகையில், "கலைஞர்களுக்கு மொழி எல்லையே கிடையாது. அவர்கள் எல்லா மொழி படங்களிலும் நடிக்க முடியும். நான் கன்னட படங்களில் நடித்துள்ளேன். கன்னடராக ஆசைப்பட்டுகிறேன்.
கலைஞர்கள் எங்கிருந்தாலும் நிலை மாறக்கூடாது. அதற்கு நானே ஒரு உதாரணம். பாரதி விஷ்ணுவர்த்தன், ஜெயந்தி போன்றோர் தென் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் நடித்தவர்கள். அனைத்து மொழி மக்களாலும் அவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும். எனது குருநாதர் பாலச்சந்தர், பெங்களூர் சென்று கன்னடத்தில் வெளியாகும் படங்களை பார்த்துவிட்டுவருமாறு எனக்கு உத்தரவிடுவார்.
ஏனெனில் 1970-80களில் வெளியான கன்னட திரைப்படங்கள் அகில இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்தன. நான் கர்நாடகாவை சேர்ந்தவன்தான். கன்னட திரையுலக விழாவுக்கு என்னை அழைக்காவிட்டாலும் கூட நான் வந்து பங்கேற்பேன்". இவ்வாறு கமல் கூறியிருந்தார்.
கமலின் இந்த பேச்சு கர்நாடக சினிமா வட்டாரத்தில் வரவேற்பை பெற்றது. கன்னட ரசிகர்கள் கமல் குறித்து பெருமிதமாக பேட்டிகள் கொடுத்திருந்தனர்.
கலைஞர்களுக்கு மொழி ஒரு தடையில்லை என்பதை குறிப்பிடுவதற்காக மலையாளி என்று தற்போது கூறியிருப்பார் என்பதற்கு இந்த 'கன்னடர்' சம்பவம் ஒரு உதாரணம் என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.