மரண வேதனையை விவரிக்க வார்த்தையில்லை: குஜராத் கலவரம் பற்றி மோடி
அகமதாபாத்: குஜராத் கலவரத்தால் தாம் விவரிக்க முடியாத வேதனையுற்றதாகவும், அந்த வேதனையை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்றும் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
2002-ம் ஆண்டில் குஜராத்தில் ஏற்பட்ட மதக் கலவரத்தில் சுமார் 1000 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள். குல்பர்க் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரி உள்பட 68 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் முதல்வர் மோடி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளுக்கு தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டி இஷான் ஜாப்ரியின் மனைவி ஜக்கியா ஜாப்ரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு, கலவரத்தில் முதல்வர் மோடிக்கு தொடர்பில்லை என்று அறிக்கை தாக்கல் செய்தது. இதை எதிர்த்து அகமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜக்கிய ஜாப்ரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு வியாழக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.
இதுவரை குஜராத் கலவரம் தொடர்பான பத்திரிகையாளர்களின் கேள்விகளைத் தவிர்த்து வந்த மோடி முதன்முறையாக தன்னுடைய தரப்பை, தன் அதிகாரப்பூர்வ வலைப்பதிவுத் தளத்தில் எழுதியுள்ளார். அந்தத் தன்னிலை விளக்கக் கட்டுரையின் விவரம்:

மன நிம்மதி
"வாய்மையே வெல்லும். நீதிமன்றத் தீர்ப்பு எனக்கு மன நிம்மதியை அளித்துள்ளது. 2002-ம் ஆண்டில் கலவரம் வெடித்தது. இது எதிர்பாராத பேரிடி. அப்பாவிகள் கொல்லப்பட்டனர். குடும்பங்கள் நிர்க்கதியாக நின்றன. சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. அடுத்தடுத்து சோதனைகள் ஏற்பட்டன.

தாங்கமுடியாத வேதனை
என்னுடைய இதயம் உலுக்கப்பட்டது. துயரம், சோகம், துன்பம், வலி, வேதனை, கடுந்துயரம், மரண வேதனை என எந்த வார்த்தைகளாலும் எனது வேதனையை விவரிக்க முடியாது.

நிவாரணப்பணிகள்
கடவுள் எனக்கு தந்த மனோதிடத்தால் தனி மனிதனச் சிந்தனையைச் செலுத்தினேன். என்னுடைய தனிப்பட்ட வேதனை, வலியை தூக்கியெறிந்துவிட்டு அமைதி, நீதி, நிவாரணப் பணிகளுக்காக என்னை அர்ப்பணித்துக் கொண்டேன்.

துயரமான நேரம்
அந்தச் சவாலான நேரங்களில் நமது இதிகாசம், இலக்கியங்களில் இருந்து ஆலோசனை, அறிவுரைகளை பெற்றுக் கொண்டேன். பதவியில் இருப்பவர்கள் தங்களின் தனிப்பட்ட துயரத்தை வேறு யாருடனும் பகிர்ந்துகொள்ள முடியாது. அவர்கள் தனிப்பட்ட முறையில்தான் அதனை எதிர்கொண்டாக வேண்டும்.

யாருக்கும் வரக்கூடாது
அந்தத் துயரமான காலத்தை நான் நினைவுகூரும்போதேல்லாம் கடவுளை நோக்கி பிரார்த்திக்க தொடங்கிவிடுவேன். குஜராத் கலவரம் போன்ற துயரம் நாட்டின் வேறு யாருக்கும் எந்த சமுதாயத்துக்கும் எந்த மாநிலத்திலும் நாட்டின் எந்தப் பகுதியிலும் நேரிடக் கூடாது.

கற்ற பாடம்
எனது துயரத்தை முதல் முறையாக வெளிப்படையாக பகிர்ந்து கொள்கிறேன். பழைய சம்பவங்களில் கற்ற பாடத்தின் மூலம் குஜராத் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. நாங்கள் வன்முறையை கைவிட்டு அமைதியை தேர்வு செய்தோம். பிரிவினையை ஒதுக்கி தள்ளிவிட்டு ஒற்றுமையைக் கடைப்பிடித்தோம். வெறுப்புணர்வை விரட்டிவிட்டு நல்லெண்ணத்தை வரவழைத்தோம். இது எளிதான காரியம் அல்ல.

அணைந்த தீ
இப்போது என் மனதில் அமைதியும் திருப்தியும் ஏற்பட்டுள்ளது. இதை நான் குஜராத் மக்கள் ஒவ்வொருவருக்கும் காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன். குஜராத்தில் 12 ஆண்டுகளாக எரிந்த தீ அணைகப்பட்டுவிட்டது. நான் இப்போது நிம்மதி அடைந்துளேளேன். எனக்கு ஆதரவாக நின்றவர்களுக்கு நான் நன்றி கடன்பட்டுள்ளேன்.

தவறான தகவல்கள்
என்னைக் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. எனது துயரகரமான வாழ்க்கையில் சோகமோ, வருத்தமோ என்னை பாதிக்கக்கூடாது என்று கடவுளை பிரார்த்திக்கிறேன். நீதிமன்றத் தீர்ப்பு எனக்கு கிடைத்த வெற்றி என்றோ, தோல்வி என்றா நான் கருதவில்லை நான் சமநிலையானவன்.

சமநிலைக் கொள்கை
2011-ல் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தபோதும் சமநிலை கொள்கையைத்தான் கடைப்பிடித்தேன். ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்காக 37 நாள்கள் சத்பாவனா உண்ணாவிரதம் இருந்தேன். எந்தவொரு சமுதாயம், மாநிலம், நாடாக இருந்தாலும் அமைதி நிலவினால்தான் அந்த நாட்டின் எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும். அப்போதுதான் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும்.

வாய்மையே வெல்லும்
நான் எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன்... நம் ஒவ்வொருவர் முகத்தின் புன்னகை மலர வேண்டும். அதற்காக கரம் கோர்த்து செயல்படுவோம். வாய்மையே வெல்லும்" என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கவில்லை
இதனிடையே மோடியின் மேற்கூறிய கருத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மீம் அஃப்சல், இது மோடியின் நாடகம் என்றும், கலவரம் நடந்து 12 ஆண்டுகளாகியும், அவர் அதற்காக வருத்தம் மட்டுமே தெரிவித்துள்ளதாகவும், மன்னிப்பு கேட்கவில்லை என்றும், மோடியின் இதுபோன்ற பல நாடகங்களை தாங்கள் பார்த்துள்ளதாகவும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications