எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய முடியவே முடியாது: ஜெ.வுக்கு சசிகலா புஷ்பா சவால்- காங். ஆதரவு!
டெல்லி: தமக்கு எத்தனை மிரட்டல் வந்தாலும் எம்.பி. பதவியை ஒருபோதும் ராஜினாமா செய்யவே முடியாது என்று ராஜ்யசபாவில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி. திருச்சி சிவாவை டெல்லி விமான நிலையத்தில் அதிமுக எம்பி சசிகலா புஷ்பா சரமாரியாகத் தாக்கியிருந்தார். இது குறித்து அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா நேற்று போயஸ் தோட்டத்தில் சசிகலா புஷ்பாவிடம் விசாரணை நடத்தினார்.
இதனிடையே இன்று ராஜ்யசபாவில் திடீரென பேசிய சசிகலா புஷ்பா, ஜெயலலிதா தம்மை அறைந்ததாகவும் தம்மை எம்பி பதவியில் இருந்து ராஜினாமா செய்ததாகவும் அடுத்தடுத்தாக புகார் கூறினார். இது பெரும் புயலைக் கிளப்பியது.
நோ ராஜினாமா
மேலும் தமது அரசியல் சாசன எம்.பி. பதவியை ராஜினாமா செய்தாக வேண்டும் என்று ஜெயலலிதா நிர்பந்திக்கிறார்; மிரட்டுகிறார்கள்; சித்ரவதை செய்கின்றனர்; எத்தனை மிரட்டல் வந்தாலும் தாம் ஒருபோதும் எம்.பி. யை ராஜினாமா செய்யவே மாட்டேன்; செய்ய முடியாது. நான் எம்.பி.யாகவே நீடிப்பேன் என்றார்.
சசிகலாவுக்கு எதிர்ப்பு
இதற்கு அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவரை பேசவிடாமல் ராஜ்யசபா துணைத் தலைவர் குரியன் அமரச் செய்தார்.
காங்கிரஸ் ஆதரவு
ஆனால் காங்கிரஸ் கட்சியின் குலாம்நபி ஆசாத் சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவு தெரிவித்தார். சசிகலா புஷ்பாவை தொடர்ந்து பேச அனுமதிக்க வேண்டும் என்றும் குலாம்நபி ஆசாத் வலியுறுத்தினார்.
ஆவேசமும் அழுகையும்...
தொடக்கத்தில் ஆவேசமாக பேசினார் சசிகலா புஷ்பா. இந்த நாட்டில் பெண் எம்பிக்களுக்கு எங்கே பாதுகாப்பு இருக்கிறது? எனக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. எனக்கு அரசு பாதுகாப்பு தர வேண்டும் என்று முழங்கியவர் கடைசியில் கண்ணீர்விட்டு கதறி பேச்சை முடித்தார்.