சரியாக பணியாற்றாத அமைச்சர்கள் குறித்து குடியரசுத்தலைவருக்கு அறிக்கை: கர்நாடக ஆளுநர் எச்சரிக்கை
பெங்களூர்: அமைச்சர்கள் சரியாக தங்களது பணிகளை மேற்கொள்ளாவிட்டால், அது குறித்து குடியரசுத்தலைவருக்கு அறிக்கை அனுப்புவேன் என கர்நாடக ஆளுநர் பரத்வாஜ் எச்சரித்துள்ளார்.
நேற்று பெங்களூர் கண்டீரா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தேசிய விபத்து மேலாண்மை தின விழாவில் கலந்து கொண்ட அம்மாநில ஆளுநர் பரத்வாஜ், விழா முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில்களாவது:-
கர்நாடக அமைச்சர்களின் செயல்பாடுகளை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். எந்த மந்திரியின் செயல்பாட்டிலும் குறைபாடோ அல்லது பணியில் கவனக்குறைவாக இருப்பதாகவோ தெரியவந்தால் அதுகுறித்து குடியரசுத்தலைவருக்கு அறிக்கை அளிப்பேன்.
அரசியலமைப்பின் முக்கிய பிரதிநிதியான நான், மாநில அரசு மீது கவனம் செலுத்துவது அவசியம். அதுவே எனது கடமை. அந்த பணியை நான் செய்வேன். அமைச்சர்களின் செயல்பாட்டில் கவனிக்கத்தக்க விஷயங்கள் இருந்தால் அதுகுறித்து நான் நிச்சயமாக குடியரசுத்தலைவர் கவனத்துக்கு கொண்டு செல்வேன்.
எனது பதவி காலம் வருகிற ஜூன் மாதம் நிறைவடைய உள்ளது. அதன்பிறகு நான் இதே பதவியில் நீடிப்பது குறித்து குடியரசுத்தலைவர் தான் முடிவு எடுக்க வேண்டும். ஆளுநரை மாற்ற சிலர் முயற்சி செய்வதாக கூறுவதில் உண்மை எதுவும் இல்லை.
கர்நாடகத்தையும், பெங்களூர் நகரையும் நான் மிகவும் நேசிக்கிறேன். 1994-ம் ஆண்டு நான் மத்திய சட்ட அமைச்சராக இருந்தபோது, பெரும்பாலான கூட்டங்களை பெங்களூர் விதானசவுதாவில் நடத்தினேன். பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மத்திய அமைச்சர்களை இங்கேயே அழைத்து கூட்டங்களில் பங்கேற்க செய்தேன். பெங்களூர் அழகான நகரம். சிறந்த சுற்றுலா தலம். எனக்கு பெங்களூரை விட்டு செல்ல மனம் இல்லை.
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் திக்விஜய் சிங் என்னை சந்தித்து பேசியது குறித்து நீங்கள் (நிருபர்கள்) கேட்கிறீர்கள். நான் மத்தியபிரதேசத்தில் 25 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்தேன். திக்விஜய் சிங் 10 ஆண்டுகள் முதல்வராக இருந்தார். அப்போது நாங்கள் இருவரும் நண்பர்கள் ஆனோம். அதன்பிறகு நாங்கள் சந்தித்துக் கொள்வது சாதாரணம். அவர் பெங்களூர் வந்தால் என்னை சந்திப்பார். இல்லாவிட்டால், நான் அவரை சந்திப்பேன். இதற்கு வேறு அர்த்தம் எதுவும் கற்பிக்க வேண்டாம்.
திக்விஜய் சிங்குடன் நான் அரசியல் குறித்து பேசியதாக கூறுவது பொய். அவரிடம் நான் எந்தவொரு அமைச்சர் குறித்தும் அதிருப்தி தெரிவிக்கவில்லை. அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் அதுகுறித்து நான் குடியரசுத்தலைவருக்கு அறிக்கை அளிப்பேன்.
மாநிலத்தின் நிரந்தரமான வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. நகர பாதுகாப்பு படை மற்றும் போலீசாருக்கு வசதிகளை செய்து கொடுப்பதில் பாரபட்சம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் பரிசீலனை செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்வார்.
காங்கிரஸ் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து என்னிடம் கேட்கிறீர்கள். நான் காங்கிரஸ் உறுப்பினர் இல்லை. கட்சி நடவடிக்கை பொறுப்பு வகிக்கவில்லை. அரசின் செயல்பாடுகள் மட்டுமே எனது அதிகாரத்துக்கு உட்பட்டு வருகிறதே தவிர கட்சி பொறுப்பு இல்லை. கட்சி நடவடிக்கைகளை காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஸ்வர் கவனிக்கிறார்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications