ஐ.ஏ.எஸ் அதிகாரி மர்ம மரணம்… கர்நாடகத்தில் வெடித்தது போராட்டம்... தீ வைப்பு, கல்வீச்சு
பெங்களூரு: பெங்களூருவில் ஐ.ஏ.எஸ்.அதிகாரி ரவிக்குமாரின் மர்ம மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தற்போதைக்கு 2 கோணங்களில் விசாரணை முடுக்க விடப்பட்டுள்ளதாம்.
பெங்களூருவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவிக்குமார், தாவரகரே பகுதியிலுள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இதுபற்றி தகவலறிந்த காவல்துறையினர், மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் வந்து, தடயங்களை சேகரித்தனர். உடற்கூறு சோதனைக்காக ரவிக்குமாரின் உடல் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி என பாராட்டப்படும் ரவிக்குமாரின் மரணம் பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
அவர் தனது வீட்டில் தூக்கு மாட்டிய நிலையில் மர்மமான முறையில் மரணமடைந்த காரணத்தால் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காரணம்
ரவிக்குமார் மரணத்துக்கான காரணத்தை விரைவில் கண்டு பிடிக்க வலியுறுத்தி கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது. இதனையடுத்து சில இடங்களில் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொலையா தற்கொலையா
ரவிக்குமார் கொலை செய்யப்பட்டார் எனில் யாரால் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்றும், தற்கொலை எனில் குடும்ப பிரச்சினையா அல்லது பணிச்சூழல் பிரச்சினையா என் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொலைமிரட்டல்
ரவியின் மர்ம மரணம் பற்றி கருத்து கூறியுள்ள பெங்களூரு போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி, தனக்கு கொலை மிரட்டல் வந்திருப்பதாகவோ, தனக்கு அரசியல் ரீதியான நெருக்கடி இருப்பதாக ரவிக்குமார் கூறவில்லை என்று தெரிவித்துள்ளார்.
நேர்மையான அதிகாரி
2009 ஆம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவிக்குமார், கோலார் மாவட்டத்தில் ஆட்சியராக இருந்தபோது மணல் கொள்ளைக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என்று அவருடன் பணிபுரிந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிரடி இடமாற்றம்
இந்த நிலையில், கடந்த 3 மாதத்திற்கு முன்பு கோலார் மாவட்ட ஆட்சியராக இருந்த ரவியை, வணிக வரித்துறை கூடுதல் கமிஷனராக இடமாற்றம் செய்து அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கோலார் மாவட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிரடி நடவடிக்கை
கோலாரில் இருந்து பெங்களூருக்கு வந்த பிறகும், இங்குள்ள வணிக நிறுவனங்கள் வரி கட்டாமல் ஏமாற்றி வந்ததை கண்டுபிடித்து, அந்த நிறுவனங்களில் அதிரடி ரெய்டு நடத்தினார். அதோடு பல தனியார் நிறுவனங்களிடம் இருந்து அரசுக்கு வரவேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் வரியை வசூல் செய்தார்.
நேர்மைக்கு கிடைத்த பரிசு
நேர்மையான அரசு அதிகாரியான ரவிக்குமாருக்கு எதிரிகள் அதிகம் என்கின்றனர். நேற்றைய தினம் அவர் யாருடனும் பேசவில்லை. யாருடைய தொலைபேசி அழைப்புகளையும் எடுக்கவில்லை. கடைசியில் உயிரிழந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகள், இ.மெயில் தகவல்களை போலீசார் சேகரித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கர்நாடகாவில் போராட்டம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி ரவிக்குமாரின் கொலை கர்நாடகாவில் கொதிப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அவரை அதிகம் நேசித்த கோலார் மக்கள், கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு உடனடியாக பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. சில பேருந்துகள் மீது கல்வீசப்பட்டது.
பேருந்துக்கு தீ வைப்பு
ரவிக்குமாரின் சொந்த ஊரான தும்கூர் மாவட்டம் குனிகல்லில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அங்கு பேருந்துகளுக்கு தீவைக்ப்பட்டதால் பதற்றம் உருவாகியுள்ளது.
தேர்வுகள் ரத்து
கர்நாடகா மாநிலத்தில் தற்போது பி.யு.சி இரண்டாம் ஆண்டுதேர்வுகள் நடைபெற்று வருகின்றன. கலவரம் காரணமாக இன்று நடைபெற இருந்த தேர்வுகள் சில இடங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications