பேச்சுவார்த்தையில் சீறிய முதல்வர்.. பணிந்த கேரள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.. வேலை நிறுத்தம் வாபஸ்
திருவனந்தபுரம்: லஞ்ச ஒழிப்பு அமைப்பு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கூண்டோடு லீவு எடுத்து போராட முடிவு செய்த நிலையில், முதல்வர் தலையீட்டால் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
கேரள மாநில லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு அமைப்பின் இயக்குநர் ஜேக்கப் தாமஸ் தனது பதவியை தவறாக பயன்படுத்தி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் குற்றம்சாட்டிவருகிறார்கள்.

எனவே திங்கள்கிழமையான இன்று ஒரு நாள் கேரள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அனைவரும் விடுப்பு எடுக்க முடிவு செய்துள்ளதாக ஐஏஎஸ் அதிகாரிகள் நடுவேயான வாட்ஸ்அப் குழுக்களில் தகவல்கள் பரவின.
அதேற்கேப பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், தலைமைச் செயலரிடம் விடுப்பு கடிதம் கொடுத்தனர். ஊழலுக்கு அங்கீகாரம் அளிக்க கோரி, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் போராட்டம் தொடங்கியுள்ளதாக ஒரு தரப்பும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக மறுதரப்பும் கூறிவருவதால் கேரள அதிகாரிகள் மட்டத்தில் கொந்தளிப்பு நிலவியது.
இந்த மிரட்டலுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நிர்வாக குழறுபடியை தடுக்க, முதல்வர் பினராயி விஜயன், இன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, போராட்டத்திற்கு தனது கடும் ஆட்சேபனைகளை தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கையில் அரசுக்கு பங்கு கிடையாது. ஆனால் நீங்களோ அரசுக்கு எதிராக போராட்டம் அறிவித்துள்ளீர்கள். இதை எனது அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று சீறினார் பினராய் விஜயன். இறுதியில் அதிகாரிகள் இறங்கி வந்து தங்கள் வேலை நிறுத்த மிரட்டலை வாபஸ் பெற்றனர்.












Click it and Unblock the Notifications