ராகுல் காந்திக்குப் போதிய பாதுகாப்பு தராத தமிழக போலீஸ்.. மத்திய உள்துறை கடும் அதிருப்தி
Recommended Video

டெல்லி: திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக சென்னை வந்திருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தமிழக போலீஸார் போதிய பாதுகாப்பு தரவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உளவுப் பிரிவு அறிக்கை அனுப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி மரணமடைந்தார். அவரது உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. பிரதமர் மோடி வரும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லாமல், கூட்ட நெரிசல் இல்லாமல் போலீஸ் பாதுகாப்பு பக்காவாக இருந்தது. ஆனால் பிரதமர் வந்து சென்ற பின்னர் நிலைமை மாறியது.
திடீரென கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது. ராஜாஜி ஹால் படியேறி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அஞ்சலி செலுத்த வந்து விட்டனர். அதேபோல விஐபிக்கள் வரும் பாதைகளையும் ஆக்கிரமித்து புகத் தொடங்கினர். இதனால் அந்த இடமே களேபரமாகப் போனது. போலீஸார் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். போதிய அளவில் போலீஸாரும் இல்லை.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு வருகை தந்தார். அவரை விஐபிக்கள் வரும் பாதை வழியாக கூட்டி வர முடியவில்லை. இதனால் பக்கவாட்டில் இருந்த மாடிப்படி வழியாக கூட்டி வந்தனர். ஆனால் அங்கும் பெரும் கூட்ட நெரிசலில் அவர் சிக்கிக் கொண்டார். தொண்டர்களோடு தொண்டராக படு சாதாரணமாக அவர் அழைத்து வரப்பட்டார். விஷமிகள் யாரேனும் கூட்டத்தில் இருந்திருந்தால் நிச்சயம் ஏதாவது விபரீதம் நடந்திருக்கும். அந்த அளவுக்கு பாதுகாப்பே இல்லாத நிலையில் ராகுல் காந்தி இருந்தார். அவரைச் சுற்றி அவரது பாதுகாப்புப் படையினர்தான் இருந்தனர். போலீஸாரை அதிகம் பார்க்க முடியவில்லை.
கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கும் மேலாக பாதுகாப்பு இல்லாத சூழலில் இருந்தார் ராகுல் காந்தி. இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாகியுள்ளது. தமிழக போலீஸார் இப்படியா ராகுலின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குவார்கள் என மத்திய உளவுப் பிரிவு அதிருப்தியும், கோபமும் கொண்டுள்ளதாம். இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்திற்கு அது அறிக்கை அனுப்பியுள்ளதாம்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் கண்டனம்:
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். தமிழக அரசு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications