ஜெ.வின் வாரிசு என அம்ருதா நிரூபித்தால் அதிமுக தலைமை பொறுப்பை ஏற்கட்டும்... சசிகலா புஷ்பா தடாலடி
ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு என பெங்களூர் அம்ருத்தா நிரூபித்தால் அதிமுக தலைமை பொறுப்பை ஏற்கட்டும் என்று சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.
டெல்லி: ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு என பெங்களூர் அம்ருத்தா
விஞ்ஞான ரீதியில் நிரூபித்துவிட்டால் அவரை நான் ஏற்றுக் கொள்வேன் என்றும் அதிமுகவின் தலைமை பொறுப்பே ஏற்க வழிவிடுவேன் என்றும் சசிகலா புஷ்பா எம்.பி. தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று முதல் முதலாக குரல் கொடுத்தவர் சசிகலா புஷ்பா எம்.பி. தான். அடுத்தபடியாக சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்பதை எதிர்த்தவரும் அவர்தான்.
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவுக்கு போட்டியாக நிற்க கட்சி தலைமை அலுவலகத்துக்கு கணவரை அனுப்பி விண்ணப்பம் பெற்று வர சொன்னபோது சசிகலாவின் ஆதரவாளர்கள் சசிகலா புஷ்பாவின் கணவரை தாக்கினர். இது பெரும் பரபரப்பை கிளப்பியது

தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தேன்
அதிமுகவின் எதிர்காலம் குறித்து சன் நியூஸ் சேனலில் சிறப்பு நேர்காணல் நிகழ்ச்சியில் சசிகலா புஷ்பா கூறுகையில் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்பதற்கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை என்றுநான்தான் முதலில் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தேன். அதனடிப்படையில்தான் சசிகலா நடராஜன் அவர்களின் குடும்பம் வெளியே தள்ளப்பட்டிருக்கிறது.

பொதுச் செயலாளர் யார் என போட்டி
தேர்தல் கமிஷனில் என்னுடைய புகார் நிலுவையில் உள்ளது. இரட்டை இலைக்கு மட்டுமே இப்போது தீர்ப்பு வந்துள்ளது. பொதுச் செயலாளர் யார் என்ற போட்டி வரும் போது நிச்சயமாக நான் நிற்பேன். என் தலைமையில் அதிமுக தலைமையில் தனி அணி உருவாகி வருகிறது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, நீட், ஓகி புயல் என பிரச்சினைகள் வந்தது. இதுபோல் பிரச்சினைகள் எழும்போது எனது தலைமையை நிரூபிப்பேன்.

தொண்டர்கள் என்னை ஏற்பர்
ஜெயலலிதாவே சசிகலா புஷ்பாவை அடுத்த தலைமை என்று கூறயிருந்த நிலையில் சசிகலா குடும்பத்தினரால்தான் இது கெட்டுவிட்டது என்ற உண்மையை புரிந்து கொள்ளும் தொண்டர்கள் என்னை நிச்சயம் ஏற்றுக் கொள்வர். சந்தர்ப்பம் வரும் போது ஓபிஎஸ், ஈபிஎஸ், தினகரன் ஆகியோர் ஒன்று சேர்ந்து கொள்வர். எம்எல்ஏ சீட்டுக்கு ஒரு தொகுதியில் தகுதி வாய்ந்த நபரை விட்டுவிட்டு பணத்தை பெற்றுக் கொண்டு தகுதியில்லாதவருக்கு சீட் வாங்கிக் கொடுப்பதுதான் சசிகலா குடும்பத்தினரின் வேலை. இதற்கு ஆண்டவன் என் மூலமாக தீர்வு கொடுத்துள்ளார்.

கட்சி பொறுப்பை ஏற்கட்டும்
அம்ருத்தா நிச்சயமாகவே ஜெயலலிதாவின் வாரிசு என நிரூபித்துவிட்டால் நான் அவரை நிச்சயம் ஏற்றுக் கொள்வேன். அதிமுகவை தலைமையேற்க விரும்பினாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். அவருக்கு பக்கபலமாக இருந்து வழிநடத்துவோம். ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் நிச்சயம் அரசுடமையாக்கப்பட வேண்டும். தேவைப்படும்போது ஸ்லீப்பர் செல்கள் என் பின்னால் போர் படை தளபதிகளாக வந்து நிற்பார்கள். அப்போது தமிழகத்தை வென்று காட்டுவோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications