மோடி இதை மட்டும் அறிவித்துவிட்டால்..லோக்சபா தேர்தலிலேயே நாங்க போட்டியிடலை.. மமதா கட்சி அதிரடி சவால்!
கொல்கத்தா: ஏழைகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் (கேஸ் சிலிண்டர்) இலவசமாக வழங்குவதற்கான அரசாணையை மத்தியில் ஆளும் பாஜக அரசு வெளியிட்டுவிட்டால் லோக்சபா தேர்தலில் இருந்தே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விலகிவிடும் என அக்கட்சி அதிரடியாக அறிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. ஏப்ரல் 19-ந் தேதி முதல் கட்ட தேர்தல் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற உள்ளது. இம்மாநிலங்களில் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்து இறுதி வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுவிட்டது.

இந்த நிலையில் மத்திய அரசு திடீரென 100 நாள் வேலை திட்டத்துக்கான ஊதிய உயர்வை அறிவித்தது. இதன்படி இனி 100 நாள் வேலை திட்டத்துக்கான ஊதியம் ரூ319 ஆக கிடைக்கும் என அறிவித்திருக்கிறது மத்திய அரசு.
இதனடிப்படையில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி, மத்திய பாஜக அரசுக்கு அதிரடியாக சவால் ஒன்றை விடுத்துள்ளார். இது தொடர்பாக அபிஷேக் பானர்ஜி கூறியதாவது: பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்காக 2021 முதல் நிதி உதவி வழங்குகிறோம். இதனையே பாஜக பல மாநிலங்களில் பின்பற்றி வருகிறது.

மேற்கு வங்க மாநில அரசின் நிதிநிலை அறிக்கையிலும் கூட பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கான நிதி உதவி ரூ500-ல் இருந்து ரூ1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தலித் பெண்களுக்கான நிதி ரூ1,000-ல் இருந்து ரு1,200 ஆக உயர்த்தி உள்ளோம்.
தற்போது 100 நாள் வேலை திட்டத்தில் ஊதிய உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசுக்கு திராணி இருந்தால் சமையல் எரிவாயு சிலிண்டர், இனி ஏழைகளுக்கு இலவசம் என அரசாணை வெளியிடட்டும். அப்படி ஒரு அரசாணையை மட்டும் மத்தியில் ஆளும் பாஜக அரசு வெளியிட்டால், லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் நாங்கள் நிறுத்தியுள்ள 42 வேட்பாளர்களையும் வாபஸ் பெற்றுவிடுகிறோம். நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினோம். ஆனால் பிரதமர் மோடியோ வங்கி கணக்குகளில் ரூ15 லட்சம் போடுவோம் என்றார். நிறைவேற்றினாரா? இல்லையே? இவ்வாறு அபிஷேக் பானர்ஜி கூறினார்.












Click it and Unblock the Notifications