அதிர்ஷ்டசாலி நான் இருக்கும்போது துரதிர்ஷ்டசாலி எதுக்கு...டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் மோடி!
டெல்லி: டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் நரேந்திரமோடி பேசியதாவது: வாக்குறுதி கொடுத்துவிட்டு அதை மறந்துவிடுவது என்ற பழக்கம் அரசியலில் உள்ளது. அதுபோன்ற சந்தர்ப்பவாதிகளை நாங்கள் எதிர்க்கிறோம். இந்த சந்தர்ப்பவாதிகள்தான், டேபிளுக்கு கீழே டீலிங் செய்து ஆட்சியமைத்தனர். தினமும் ஏதாவது ஒரு பொய்யை சொல்லி மீடியாக்களில் அதை செய்தியாக வரவழைப்பதிலேயே இந்த சந்தர்ப்பவாதிகள் குறியாக உள்ளனர்.
பொறுப்புகளில் இருந்து தட்டிக்கழித்து, தப்பியோடுபவர்களால் எந்த ஒரு வேலையையும் செய்து முடிக்க முடியாது. தினந்தோறும் போராட்டம் நடத்துவோரிடம் அரசமைக்கும் அதிகாரத்தை மக்கள் கொடுக்காதீர்கள். அதுபோன்ற நபர்களுக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் மனநிலை இருக்காது.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலை குறையவில்லையா? உங்கள் பணம் உங்களிடம் சேமிப்பாக மாறவில்லையா? நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இதுபோன்று நிலைமை மாறுவதற்கு காரணம், நரேந்திரமோடியின் அதிருஷ்டம்தான் என்று மக்கள் கூறுகிறார்கள். எனது அதிருஷ்டம் நாட்டுக்கு பலன் தரும் என்று தெரியும்போது, எதற்காக அதிருஷ்டமில்லாத அரசை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நாட்டின் 120 கோடி மக்களும், எனக்கு ஆதரவாக உள்ளனர். உலகின் மிகவும் அதிகாரம் மிக்க அரசாக இந்திய அரசு மாறியுள்ளது. நமது நாட்டின் 65 சதவீத மக்கள் 35 வயதுக்குட்பட்டவர்களாகும். எனவேதான் நாடு பலமானதாக உள்ளது. டெல்லிதான் இந்தியாவின் ஒட்டுமொத்த உருவக நகரமாகும். இதை ஒரு மினி இந்தியா என்று அழைக்கலாம்.
எனவே டெல்லி மக்களுக்கு பொறுப்பு அதிகமாக உள்ளது. நான் குழந்தையாக இருக்கும்போதில் இருந்தே, வறுமையை ஒழிப்போம் என்று நமது அரசியல்வாதிகள் கூறிவருகின்றனர். இவர்களுக்கு அரசியல்தான் முக்கியமே தவிர, வறுமை ஒழிப்பு கிடையாது.
இதற்கு முன்பு என்றாவது ஏழைகளை, வங்கிகளில் பார்த்துள்ளீர்களா அல்லது வங்கிக்கு பக்கத்தில்தான் பார்த்துள்ளீர்களா. எங்கள் அரசு வந்த பிறகுதான் அனைவருக்கும் வங்கி கணக்கு துவங்கச் செய்யப்பட்டு ஏழைகளும் வங்கிகளுக்குள் வரத்தொடங்கியுள்ளனர். இவ்வாறு மோடி பேசினார்.