பாகிஸ்தானில் மோடி பிரியாணி சாப்பிடும்போது.. இந்தியா அங்கு விளையாடக்கூடாதா? தேஜஸ்வி யாதவ் கேள்வி
பாட்னா: பாகிஸ்தானில் பிரதமர் சென்று பிரியாணி சாப்பிடும்போது இந்திய கிரிக்கெட் அணி ஏன் அங்கு சென்று விளையாடக்கூடாது என்று ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவரான தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பி உள்ளார்.
நம் நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சுமூகமான உறவு என்பது இல்லை. நமக்கு சொந்தமான ஜம்மு காஷ்மீருக்கு உரிமை கொண்டாடி, பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கட்டவிழ்த்து விடுவது தான் இந்த பிரச்சனைக்கு காரணம். இதனால் இருநாடுகளுக்கான உறவு என்பது அரசியலை தாண்டி விளையாட்டிலும் எதிரொலித்து வருகிறது.

குறிப்பாக கிரிக்கெட். இந்திய கிரிக்கெட் அணி பல நாடுகளுடன் ஒருநாள், டெஸ்ட், டி20 தொடர்களில் விளையாடி வந்தாலும் கூட பாகிஸ்தானுடன் விளையாடுவது இல்லை. ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டிகளிலும் இந்தியா, பாகிஸ்தானில் நடக்காமல் வேறு இடங்களில் தான் நடந்து வருகிறது.
இத்தகைய சூழலில் தான் ஐசிசி சாம்பியன் டிராபி போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. 2025 பிப்ரவரி மாதம் 19ம் தேதி தொடங்கும் சாம்பியன் டிராபி போட்டி மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது. இதுதொடர்பான முழு அட்டவணை இன்னும் வெளியாகவில்லை. இந்த போட்டியை பாகிஸ்தான் ஏற்று நடத்துகிறது.
இதனால் பாகிஸ்தான் சென்று இந்தியா விளையாடும் சூழல் உருவானது. ஆனால் பாதுகாப்பு காரணங்களால் இந்தியா, பாகிஸ்தான் செல்லவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்தியா போட்டியை பாகிஸ்தானில் நடத்தாமல் வேறு நாட்டில் நடத்த வேண்டும் என்று பிசிசிஐ சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால் சாம்பியன் டிராபி 2025 போட்டியை இந்தியா புறக்கணிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த குழப்பத்தால் தான் இன்னும் போட்டி அட்டவணை என்பது வெளியிடப்படாமல் உள்ளது. போட்டி அட்டவணை தொடர்பான இன்று (நவம்பர் 30ம் தேதி) ஆலோசனை நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பீகார் மாஜி துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். பீகார் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவின் மகனும், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் ரஞ்சி மற்றும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் தான் அவர் சாம்பியன் டிராபி போட்டிக்காக பாகிஸ்தான் சென்று இந்தியா விளையாட மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தேஜஸ்வி யாதவ், ‛‛விளையாட்டுடன் அரசியலை கலப்பது நல்ல விஷயமாக நான் பார்க்கவில்லை. பாகிஸ்தான் சென்று இந்தியா விளையாடினால் தான் என்ன? பாகிஸ்தான் சென்று பிரதமர் மோடி பிரியாணி சாப்பிடும்போது பாகிஸ்தானில் நடக்கும் கிரிக்கெட் தொடருக்காக இந்தியா சென்றால் தான் என்ன? என கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications