‛சர்வாதிகாரம்’.. பாஜக மீண்டும் வென்றால்.. தேர்தல் என்பதே இருக்காது! பாட்னாவில் பகீர் கிளப்பிய மம்தா
பாட்னா: மத்தியில் மீண்டும் சர்வாதிகார பாஜக அரசு அமைந்தால் எதிர்காலத்தில் இந்தியாவில் தேர்தல் இல்லாத நிலை இருக்கும். இதனால் பாஜகவை தோற்கடிக்க வேண்டியது அவசியம் என பீகாரில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி பரபரப்பை பற்ற வைத்துள்ளார்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. இந்நிலையில் தான் இன்று பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமை வகித்தார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்பட 16 கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டம் சுமார் 4 மணிநேரத்துக்கும் அதிகமாக நடந்து முடிந்தது. இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர்களின் 2வது ஆலோசனை கூட்டம் இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடக்க இருக்கிறது. இதற்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் தான் இன்றைய ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு தலைவர்கள் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த வேளையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். பாஜக மத்திய விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தி வருகிறது. பாஜகவுக்கு எதிராக பேசி வரும் எதிர்க்கட்சியினர் மீது அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட பிற ஏஜென்சிகள் மீது வழக்குப்பதிவு செய்கின்றனர். நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில் தான் இதனை பாஜக செய்து வருகிறது. இது நடக்க கூடாது.
நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம், சாமானியர்கள், தலித்கள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடக்கிறது. இதுபற்றி பாஜகவினர் கவலை கொள்வது இல்லை. மேலும் நாட்டின் பொருளாதாரம் சீரழிக்கப்படுகிறது. அதனையும் மத்திய பாஜக அரசு என்பது கண்டுக்கொள்ளாமல் உள்ளது'' என்று அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் டெல்லியில் ஆம்ஆத்மி அரசுக்கு எதிராகவும் மம்தா பானர்ஜி கூறினார். டெல்லியில் புதிய சட்டத்திருத்தத்தை மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ளது. இது ஒரு கருப்பு சட்டமாகும். இதனை எதிர்த்து போராடுவோம்'' என்றார். இதன்மூலம் டெல்லியில் குடிமைப்பணியில் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு தனக்கு ஆதரவாகவும், ஆம்ஆத்மி அரசுக்கு எதிராகவும் கொண்டு வரும் சட்டத்துக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications