பெரியார்- அம்பேத்கர் வட்ட விவகாரத்தில் ஐ.ஐ.டி. இயக்குநரின் விளக்கம் - எஸ்.சி. கமிஷன் அதிருப்தி!!
டெல்லி: பெரியார்- அம்பேத்கர் வாசகர் வட்டத்துக்கு தடை விதித்தது தொடர்பாக ஐ.ஐ.டி. இயக்குநர் நேரில் ஆஜராகி அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் கூறியுள்ளது. இதனால் ஐ.ஐ.டி. இயக்குநரை மீண்டும் ஜூலை 6-ந் தேதி ஆஜராக அந்த ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் என்ற மாணவர் அமைப்புக்கு தடை விதித்தது தொடர்பாக விளக்கம் அளிக்க சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் ஆகியோர் நேரில் ஆஜராக தேசிய ஆதிதிராவிடர் ஆணைய தலைவர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இதன்படி நேற்று சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் பொறுப்பு வகிக்கும் பாஸ்கரன் ராமமூர்த்தி மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணை செயலாளர் பிரவீண் குமார் ஆகியோர் தேசிய ஆதி திராவிடர் ஆணையத்தின் தலைவர் பி.எல்.புனியா முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இந்த விசாரணை கூட்டம் முடிந்ததும் தேசிய ஆதி திராவிட ஆணையத்தின் தலைவர் பி.எல்.புனியா செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னை ஐ.ஐ.டி. இயக்குநரிடம் எதன் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டது என்று விளக்கம் கேட்கப்பட்டது. முன்பு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இந்த விளக்கத்தை தேசிய ஆதி திராவிடர் ஆணையம் ஏற்கவில்லை. இந்த விளக்கம் முழுமையானதாகவும் திருப்தி அளிப்பதாகவும் இல்லை என்பதால் 10 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு மேலும் ஒரு நோட்டீஸ் சென்னை ஐ.ஐ.டி.க்கு அனுப்பப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூலை 6-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவு பிறப்பித்து இருக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications