கால் சூப்... பிரியாணிக்காக ஆசியாவில் வேட்டையாடப்படும் கரடிகள்!
டெல்லி: ஆசியா முழுவதும் கடந்த 12 ஆண்டுகளில் குறைந்தது 2801 கரடிகள் சட்டவிரோதமாக வேட்டை யாடப்பட்டுள்ளதாக டிராஃபிக் (TRAFFIC) அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டுவரையில் ஆசியா முழுவதும் அந்த அமைப்பின் வன விலங்கு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கரடி சிறப்பு ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு நீண்ட அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
அதில் கூறியிருப்பதாவது, கடந்த 2000-ம் ஆண்டு தொடங்கி 2011-ம் ஆண்டு வரை 12 ஆண்டுகளில் ஆசியா முழுவதும் 17 நாடுகளில் கரடிகள் வேட்டையாடப்படுவது மற்றும் சட்டவிரோதமாக கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.

2801 கரடிகள் வேட்டை
இந்தக் காலகட்டத்தில் கரடிகளின் உடல் பாகங்கள் பல்வேறு நாடுகளில் 700 முறை அந்தந்த நாடுகளின் பாதுகாப்பு அமைப்புகளின் மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் குறைந்து 2801 கரடிகள் வேட்டையாடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

வித்தை காட்டும் கரடிகள்
கம்போடியா, லாவோஸ், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் கரடிகளை தனியார் பண்ணைகளில் வேலை செய்யவும், பணக்காரர்களுக்கு வித்தை காட்டியும், நடனமாடியும் மகிழ்விக்க காடுகளில் இருந்து கடத்துகின்றனர். அங்கெல்லாம் சுமார் 300 உயிருள்ள கரடிகள் மீட்கப்பட்டுள்ளன.

கொல்லப்படும் கரடிகள்
இந்தியா, லாவோஸ், ரஷ்யா ஆகிய நாடுகளில் மூட நம்பிக்கை மற்றும் மத நம்பிக்கைகளுக்காக கரடியின் நகங்கள், பற்கள், எலும்புகள் கடத்தப்படுகின்றன.

கரடிக்கால் சூப்
சீனா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் கரடிகள் உடல் பாகங்கள் மருத்துவ பொருட்கள் தயாரிக்கவும், தோல்களில் இருந்து உடைகள் தயாரிக்கவும் கடத்தப்படுகின்றன. மேலும், சீனாவில் கரடியின் கால்சூப் மற்றும் கரடி கறியை சாப்பிடுவது குறிப்பிட்ட பிரிவினர் மற்றும் செல்வந்தர்களிடம் பிரபலமாக கருதப்படுகிறது.

6000 கரடி கால்கள்
இதில் ரஷ்யா மற்றும் சீனாவில் மட்டுமே 69 சதவீதம் கரடிகள் சட்டவிரோதமாக கொல்லப்பட்டுள்ளன. அங்கு மட்டும் கடந்த 12 ஆண்டுகளில் சுமார் 6000 கால் பாதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

1934 கரடிகள்
இதன் மூலம் அங்கு சுமார் 1934 கரடிகள் கொல்லப்பட்டிருப்பதாக அந்த நாட்டு பாதுகாப்பு அமைப்புகளின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கடத்தப்படும் கரடிகள்
இவை தவிர, நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கும், லாவோஸில் இருந்து வியட்நாம், சீனாவுக்கும், மியான்மர், வியட்நாமில் இருந்து ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் அதிக அளவில் கரடிகளின் உடல் பாகங்கள் கடத்தப்பட்டுள்ளன.

கரடி கடத்தல் குற்றங்கள்
கம்போடியா 190, சீனா 145 ,வியட்நாம் 102 , ரஷ்யா 59 ,மலேஷியா 38, தாய்லாந்து 29,லாவோஸ் 29,இந்தியா 23, இதர நாடுகள் 85 குற்றங்கள் நடைபெற்றுள்ளன.

சீனாவில் கரடி மருத்துவம்
இதுகுறித்து டிராஃபிக் அமைப்பின் தென் கிழக்கு ஆசியாவுக்கான பிராந்திய இயக்குநர் டாக்டர் கிறிஸ் ஷெப் பர்டு, "மேற்கண்டவற்றில் மிக அதிகமாக சீனாவின் பாரம்பரிய மருத்துவப் பொருட்கள் தயாரிப்புகளுக்காக கரடிகள் பல்வேறு நாடுகளில் இருந்து கடத்தப் படுவதால் சீனா, அதன் பாரம்பரிய மருத்துவப் பொருட்களுக்கு கட்டுப்பாடு மற்றும் தடை விதிக்க வேண்டும்.

பாதுகாப்பற்ற தன்மை
மற்ற நாடுகளில் வனப்பாதுகாப்பு சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் நாட்டின் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பற்ற தன்மை நிலவுகிறது. என்று டாக்டர் கிறிஸ் ஷெப் பர்டு குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications