மோடி, கவாஸ்கர், கபில் எல்லோரும் வாங்க.. இம்ரான் அழைப்பு.. நான் வர்றேன்.. சித்து குதூகலிப்பு!
Recommended Video

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் கபில் தேவ், கவாஸ்கர் உள்பட பல இந்திய பிரமுகர்களுக்கு பாகிஸ்தானின் அடுத்த பிரதமராகப் பதவியேற்கவுள்ள இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார். இதில் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து அழைப்பை ஏற்றுள்ளார்.
பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் இம்ரான் கான் கட்சி தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிறிய கட்சிகளின் ஆதரவுடன் அவர் ஆட்சியமைக்கவுள்ளார்.

இந்த நிலையில் தனது பதவியேற்பு விழாவை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளார் இம்ரான் கான். அதில் இந்தியத் தலைவர்களை பெருமளவில் கலந்து கொள்ள வைக்கவும் அவர் ஆர்வம் காட்டுகிறார். இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஆகஸ்ட் 11ம் தேதி இம்ரான் கான் பிரதமராக பதவியேற்கும் விழா நடைபெறவுள்ளது. இம்ரான் கான் கட்சியின் வெற்றியைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, தொலைபேசி மூலம் இம்ரான் கானைத் தொடர்பு கொண்டு வாழ்த்தியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் ஜாம்பவான்கள் கவாஸ்கர், கபில் தேவ், சித்து, நடிகர் அமீர்கான் உள்பட இந்திய பிரபலங்கள் பலருக்கும் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.
இதில் சித்து உடனடியாக அழைப்பை ஏற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இது மிகப் பெரிய கெளரவம். இதை உடனடியாக ஏற்கிறேன். மிகச் சிறந்த குணாதிவாதி இம்ரான்கான். மிகுந்த நம்பிக்கைக்குரியவர். அவரது பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறேன் என்று கூறியுள்ளார் சித்து.
முன்பு 2014 பொதுத் தேர்தலில் மோடி வெற்றி பெற்று பதவியேற்றபோது இதேபோல பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று ஷெரீப்பும் வந்திருந்தார் என்பது நினைவிருக்கலாம். அதேபோல இப்போது மோடி செல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications