இந்தியாவில் அதிகரிக்கும் இன்டர்நெட் பயன்பாடு... ஜுன் மாசத்துக்குள்ள 50 கோடி பேரை எட்டுமாம்!
இந்தியாவில் ஜூன் மாதத்திற்குள் இன்டர்நெட்டை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையானது 50 கோடி என்ற அளவை எட்டும் என்று இந்திய இணையதள செல்போன் கழகம் மற்றும் கண்டர் ஐஎம்ஆர்பி தெரிவித்துள்ளது.
டெல்லி: இந்தியாவில் ஜூன் மாதத்திற்குள் இன்டர்நெட்டை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையானது 50 கோடி என்ற அளவை எட்டும் என்று இந்திய இணையதள செல்போன் கழகம் மற்றும் கண்டர் ஐஎம்ஆர்பி தெரிவித்துள்ளது.
'இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு 2017' என்ற புள்ளிவிவர தகவலை இந்திய இணையதள செல்போன் கழகம் மற்றும் கண்டர் ஐஎம்ஆர்பி என்ற அமைப்புகள் கூட்டறிக்கையாக வெளியிட்டுள்ளன. அதில் டிசம்பர் 2017ன்படி இன்டர்நெட் பயன்பாடு மொத்தமுள்ள மக்கள் தொகையில் 35 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2016ன் காலகட்டத்தில் இந்தியாவின் நகரப்பகுதிகளில் இன்டர்நெட் வளர்ச்சி 9.66 சதவீதம் என்று இருந்த நிலையில் டிசம்பர் 2017ல் இது சுமார் 29.5 கோடி என்ற அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது. கிராமப்புறங்களை பொறுத்தமட்டில் 2016ல் 14.11% வளர்ச்சி கண்ட நிலையில், 2017 டிசம்பர் புள்ளிவிவரப்படி 18.6 கோடி பயன்பாட்டாளர்கள் என்ற அளவில் வளர்ச்சியை கண்டுள்ளது.
நகர்ப்புறங்களை ஒப்பிடும் போது கிராமப்புறங்களில் இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறினாலும், அவற்றின் தாக்கமானது குறைந்த அளவிலேயே இருக்கிறது. எனவே தற்போதைய இந்தியாவில் இன்டர்நெட்டை பயன்படுத்துவோரில் கிராமப்புறங்களுக்கும் நகர்ப்புறங்களுக்கும் இடையே இருக்கும் வேறுபாடுகளை களைய வேண்டியுள்ளது. இந்தியாவில் உள்ள மொத்த நகர்ப்புற மக்கள் தொகையான 45.5 கோடி மக்களில் 29.5 கோடி மக்கள் இன்டர்நெட்டை பயன்படுத்துகின்றனர்.
கிராமப்புறங்களை சென்றடையவில்லை
கிராமப்புறங்களை பொறுத்த மட்டில் 2011 சென்செக்ஸ்படி 91.8 கோடி மக்கள்தொகையில் 18.6 கோடி மக்கள் மட்டுமே இன்டர்நெட் பயன்படுத்துபவர்களாக உள்ளனர். எனவே 73.2 கோடி கிராமப்புற மக்களுக்கு இன்னும் இந்த வசதி கிடைக்கவில்லை.
தினசரி இன்டர்நெட் பயன்படுத்துவோர்
இதே போன்று நாள்தோறும் 28.1 கோடி மக்கள் இன்டர்நெட்டை பயன்படுத்துகின்றனர். இவர்களில் 62 சதவீதம் பேர் தினசரி இன்டர்நெட் பயன்படுத்தும் நகர்ப்பகுதி மக்களே. ஆனால் கிராமப்புறங்களில் 53 சதவீதம் பேர் மட்டுமே தினசரி இந்த வசதியை பயன்படுத்துகின்றனர். அதாவது கிராமப்புற மக்களின் ஒரு மாத பயன்பாட்டை விட நகர்ப்புற மக்கள் இரண்டு மடங்கு அதிகம் பயன்படுத்துகின்றனர்.
ஆண்களே அதிகம் பயன்படுத்துகின்றனர்
இன்டர்நெட்டை ஆண்களே அதிகம் பயன்படுத்துவதாக இந்த கூட்டறிக்கை கூறுகிறது. மொத்தமுள்ள இன்டர்நெட் பயன்பாட்டாளர்களில் 30 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள் அதாவது 14.3 கோடி பெண்கள் மட்டுமே இணையதளம் பயன்படுத்துகின்றனர். கிராமப்புற மக்களுக்கு டிஜிட்டல் இந்தியா திட்டம் வழிவகை செய்தாலும் இன்டர்நெட் பயன்படுத்துவோர்களில் பாலின பாகுபாடு என்பது இருக்கத்தான் செய்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பம் பற்றிய பாடங்களை புகட்டி பெண்களும் பாதுகாப்பான முறையில் இன்டர்நெட்டை பயன்படுத்த கற்றுத்தர வேண்டியது கட்டாயமாக செய்ய வேண்டியுள்ள விஷயமாக இருக்கிறது.
இளைஞர்கள், மாணவர்கள்
இன்டர்நெட்டை அதிகம் பயன்படுத்துவோர் யார் என்ற தகவலையும் ஐஎம்ஆர்பி வெளியிட்டுள்ளது. இதன்படி இளைஞர்கள், மாணவர்களே நாடு முழுவதும் சுமார் 60% பேர் இன்டர்நெட்டை பயன்படுத்துகின்றனர். பொழுதுபோக்கு அம்சங்கள், சமூக வலைதள அடிமைத்தனமே இளைஞர்கள் அதிகம் இன்டர்நெட்டை பயன்படுத்த காரணம் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அரசின் திட்டங்கள் இ சேவைகளாக மாற்றப்பட்டதும் டிஜிட்டல் யுகத்தில் மாற்றத்தை கொண்டு வந்தாலும், இளைஞர்களைப் பொறுத்தமட்டில் இது ஒரு பொழுதுபோக்கு சாதனமாகவே இருக்கிறது.