அசாமில் மியா முஸ்லீம் அருங்காட்சியகத்திற்கு சீல்! 3 முஸ்லீம் தலைவர்கள் மீது பாய்ந்தது உபா! பரபரப்பு
திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் மியா முஸ்லீம் சமூகத்தினருக்கான அருங்காட்சியகத்திற்குச் சீல் வைக்கப்பட்டு உள்ளதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
அசாம் மாநிலம் கோல்பாரா மாவட்டத்தில் மியா முஸ்லிம் சமூகத்தினருக்கு என்று அருங்காட்சியகத்தை அங்கிருந்த சிலர் திறந்து இருந்தனர். இருப்பினும், இது தொடர்பாகச் சிலர் புகார் அளித்தனர்.
அதாவது வளாகத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகச் சிலர் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய அதிகாரிகள் அந்த அருங்காட்சியகத்திற்குச் சீல் வைத்தனர்.

அருங்காட்சியகம்
இந்த அருங்காட்சியகத்தில் மியா சமூகத்தின் பழங்கால பொருட்கள் உள்ளன. மிய இன மக்கள் 1890களின் பிற்பகுதியில் அசாமில் குடியேறிய வங்காள வம்சாவளியைச் சேர்ந்த விளிம்புநிலை முஸ்லிம்கள் ஆவர், விவசாயத்திற்காக இவர்கள் ஆங்கிலேயர்கள் இங்கு அழைத்து வந்தனர். பாஜக தலைவர்கள் இந்த அருங்காட்சியகத்தை மூட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். அம்மாநில முதல்வர் பிஸ்வா சர்மாவும் கூட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து இருந்தார்.

உபா சட்டம்
இந்த அருங்காட்சியகத்தை அமைத்தவர் உட்பட மூன்று பேரை அம்மாநில போலீசார் கைது செய்தனர். மத்திய அரசுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் நோக்கில் ஆயுதங்களைப் பதுக்கி வைத்து இருந்ததாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவர்கள் மீது ஐபிசி பிரிவுகளின் கீழும் உபா சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கைது
முதலில் இந்த விவகாரம் தொடர்பாக அசாம் மியா பரிஷத் என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துல் பேடன் ஷேக் கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்து இந்த அருங்காட்சியகத்தை அமைத்த அசாம் மியா பரிஷத் தலைவர் எம் மோஹர் அலி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவரையும் போலீசார் கைது செய்தனர். அதேபோல இந்த அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்த தனு ததுமியா என்பவரையும் கைது செய்தனர்

போலீஸ் விசாரணை
இப்போது கைது செய்யப்பட்டுள்ள அலி மற்றும் ஷேக் ஆகியோருக்கும் அன்சருல்லா பங்களா டீம் மற்றும் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புகளுடன் உள்ள தொடர்பு குறித்தும் விசாரிக்கப்படும் என்று அசாம் போலீஸ் சிறப்பு இயக்குநர் ஜெனரல் ஜிபி சிங் தெரிவித்தார். அங்கு ஏற்கனவே இது தொடர்பான விசாரணையில் மூன்று மதரஸாக்கள் இடிக்கப்பட்டு உள்ளது. மேலும், பலர் கைது செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

என்ன பிரச்சினை
அந்த அருங்காட்சியகம் இருந்த வீடு மத்திய அரசின் வீட்டு வசதித் திட்டமான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு பயனாளருக்கு வழங்கப்பட்டு இருந்தது. இந்தச் சூழலில் அது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டதே சர்ச்சைகள் கிளம்பக் காரணமாக இருந்தது. ஏற்கனவே இது தொடர்பாகக் கடந்த அக்.24இல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த விவகாரத்தில் தான் இப்போது மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அசாம் முதல்வர்
முன்னதாக இது குறித்து அசாம் முதல்வர் பிஸ்வா சர்மா கூறுகையில், "அங்குள்ள கலைப்பொருட்கள் அனைத்தும் பொதுவான அசாமிய கலாசாரத்தை விளக்கும் வகையிலேயே உள்ளது. மியா சமூகத்திற்கு எனக் குறிப்பிட்ட எதுவும் இல்லை. அதேபோல அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலங்களை மற்றவர்களைப் பயன்படுத்த அனுமதிப்பதும் தவறானது தான். இது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறி இருந்தார்.












Click it and Unblock the Notifications