மோடியின் சகா அமித் ஷா வசமானது பாஜகவின் லோக்சபா தேர்தல் பிரசார குழு!!
டெல்லி: பாரதிய ஜனதாவின் தேர்தல் பிரசாரக் குழுவின் அறிவிக்கப்படாத தலைவராக உருவெடுத்திருக்கிறார் நரேந்திர மோடியின் நெருங்கிய சகாவான அமித் ஷா.
பாரதிய ஜனதாவின் பிரசார குழுத் தலைவராக பின்னர் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட நிலையில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் அமித் ஷா.
குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவுக்கு சர்ச்சைக்குரிய இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டர் வழக்கில் தொடர்புள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் உத்தரப்பிரதேசத்தில் களமிறங்கிய அமித் ஷா, மோடியின் செல்வாக்கை நிலை நிறுத்தும் வகையில் வியூகம் வகுத்து செயல்பட்டு வந்தார்.

இதனாலேயே அம்மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் மோடி போட்டியிடவும் செய்கிறார். இந்நிலையில் பாஜக பிரசார ஏற்பாட்டுக் குழுவை அறிவித்தது. அக்குழுவில் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, அனந்த்குமார், வருண் காந்தி, சுதன்ஷு திவேதி மற்றும் அமித் ஷா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
ஆனால் தற்போதைய நிலையில் சுஷ்மா ஸ்வராஜ் மத்திய பிரதேசத்தின் விதிஷா தொகுதியில் போட்டியிடுகிறார். அருண் ஜேட்லி, பஞ்சாபின் அமிர்தசரஸ் தொகுதியில் களமிறங்கியுள்ளார்.
மேலும் அனந்த்குமார், தெற்கு பெங்களூர் தொகுதியில் தொகுதியிலும் வருண் காந்தி சுல்தான்பூரிலும் போட்டியிடுகின்றனர். இவர்கள் அனைவரும் தங்களது தொகுதி பிரசாரத்தில் தீவிர கவனம் செலுத்துவதால் பிரசார ஏற்பாட்டுக் குழு தலைவராக உருவெடுத்திருக்கிறார் அமித் ஷா. நாட்டின் கிராமப்புறங்களில் மோடியை மையமாக வைத்து பாஜகவின் பிரசாரம் அமைய வேண்டும் என்பதற்கான அத்தனை வியூகங்களையும் முழு வீச்சில் அமித் ஷா மேற்கொண்டு வருகிறார்.
இதற்காக 3டி ஸ்கிரீன் வசதியுடன் கூடிய சுமார் 4 ஆயிரம் ரதங்களை தயார் செய்து உத்தரப்பிரதேசத்தின் கிராமப்புறங்களில் பிரசாரம் மேற்கொள்ள ஏற்பாடு செய்துள்ளாராம் அமித் ஷா.












Click it and Unblock the Notifications