குஜராத்தில் 27 வருஷ பாஜக ஆட்சி.. ஆனா என்ன பிரயோஜனம்? மாநிலத்தில் உச்சமெடுத்த வேலையின்மை பிரச்சனை!
காந்திநகர்: குஜராத்தில் 3.64 லட்சம் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் வேலை கேட்டு பதிவு செய்துள்ளனர். முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் வேலையின்மை பிரச்னை பாஜகவின் வாக்கு வங்கியை கணிசமான அளவு பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலைவாசி உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பெட்ரோல் டீசல் விலையுயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு என பல்வேறு பிரச்னைகள் காங்கிரசுக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத்தில் வதோதராவில் உள்ள இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டத்தால் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் மட்டும் 26,921 பேர் வேலைக்காக காத்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.
நான் ராவணனா? கார்கேவுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடி.. ஒரேபோடு.. அனல் பறந்த குஜராத் பிரசாரம்
வேலையில்லா திண்டாட்டம்
குஜராத்தில் 18 வயதை கடந்தவர்கள் மொத்தம் 4.91 கோடி பேர் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த மாநிலத்தில் வேலை வாய்ப்பு பிரச்னை ஆளும் பாஜகவுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறது. கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சியான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் வேலையின்மை குறித்து எழுப்பிய கேள்விக்கு பாஜகவின் தொழிலாளர், திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் பிரிஜேஷ் மெர்ஜா சில தகவல்களை வெளியிட்டுள்ளார். இந்த தகவலை தற்போது காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தி வருகின்றன.
நிலவரம்
பிரிஜேஷ் மெர்ஜா அளித்த தகவலின்படி மாநிலம் முழுவதும் 3.64 லட்சம் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் வேலை கேட்டு பதிவு செய்துள்ளனர். அதிகபட்சமாக வதோதராவில் 26,921 பேரும், இதற்கடுத்து அகமதாபாத்தில் 26,628 பேரும், ஆனந்தில் 22,515 பேரும், ராஜ்கோட்டில் 18,997 பேரும் கெடாவில் 16,163 பேரும் வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்திலும் கடந்த 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருந்து வந்தாலும் தற்போது இந்த வேலை வாய்ப்பு பிரச்னை என்பது பூதாகரமாக வெடித்து கிளம்பி இருக்கிறது. கடந்த மே மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கு இடையில் வேலையின்மை விகிதம் 2.83% ஆக இருந்தது. ஆனால் தற்போது 10.86% இது அதிகரித்திருக்கிறது.
யதார்த்தம்
மாநிலத்தில் வேலையின்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு சமீபத்தில் நடந்த அரசு தேர்வுதான். அதாவது சமீபத்தில் மாநிலம் முழுவதும் உள்ள 3,400 கிராம பஞ்சாயத்து செயலாளர் பணிக்கு தேர்வு அறிவிக்கப்பட்டது. இதற்கு சுமார் 17 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அம்மாநிலத்தின் மாணவர்கள் வேலைவாய்ப்பு அத்தியாவசியமானது என்றும், எனவே யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் இது குறித்துதான் சிந்திக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். அதேபோல அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் குடும்பங்கள் வாழ்க்கை நடத்துவதில் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக இளைஞர்கள் கூறியுள்ளனர்.
மாணவர்களின் நிலைப்பாடு
சௌராஷ்ட்டிரா பல்கலைக்கழக மாணவர்கள் சிலரும் இது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளனர். அதாவது மாநிலத்தில் சாலைகள், மின்சாரம், குடிநீர் வசதி ஆகியவற்றை ஆளும் பாஜக செய்து கொடுத்திருக்கிறது என்றும் ஆனால், கல்வி மற்றும் சுகாதாரத்தில் போதுமான வசதிகளை அரசு உருவாக்கவில்லை என்று கூறியுள்ளனர். அதேபோல சட்டக்கல்லூரி மாணவர்களும் இது குறித்து விரிவாக பேசியுள்ளனர். அதாவது, "பாஜக அரசு சமூக பாதுகாப்பான வேலையை உருவாக்கவில்லை. எந்த அடிப்படை உரிமைகளும் அற்ற ஒப்பந்த வேலை வாய்ப்புகளையே இது உருவாக்கியுள்ளது. எனவே இது மாற்றப்பட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு புறக்கணித்திருக்கிறது. தற்போதைய சூழலில் இது மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும்" என்று கூறியுள்ளனர். ஆக இந்த தேர்தலில் வேலையில்லா திண்டாட்டம் அதிக அளவில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.