ஹேப்பி.. வாரத்துக்கு ஒருநாள் மாடுகளுக்கு லீவு.. அதுக்காக இப்படியா.. நம்ம ஊர்லதான்.. காரணம் தெரியுமா
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாடுகளுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை விடப்படுகிறது. இந்த பழக்கம் அம்மாநிலம் முழுவதும் பரவலாக பின்பற்றப்பட்டு வருகிறது.
வாரத்தில் ஒரு நாள் ஓய்வு என்பது தற்போது அனைத்து மக்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், கால்நடைகளுக்கு? ஆம் மக்களே ஜார்க்கண்ட் மாநில மக்களும் இதைதான் யோசித்தார்கள். ஒருநாள் வயலில் உழுது கொண்டிருந்த மாடு ஒன்று திடீரென கீழே சுருண்டு விழுந்துள்ளது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் பதறிய விவசாயி பக்கத்து வயலில் இருந்தவர்களை அழைத்துள்ளார். உடனடியாக மாட்டை வயலிருந்து இழுத்து வரப்பில் போட்டு எழுப்ப முயன்றுள்ளனர். ஆனால் மாடு அசையவில்லை.
உடனடியாக வைத்தியரை அழைத்து வந்து பார்த்துள்ளனர். ஆனால் அதற்குள் மாடு செத்துவிட்டது. ஓய்வே கொடுக்காமல் வாரம் முழுவதும் தொடர்ந்து வேலை வாங்கியதால்தான் மாடு செத்துவிட்டது என்று வைத்தியர் கூறவே கிராமத்தினர், தாங்கள் தவறு செய்துவிட்டதாக கூறி அழுதுள்ளனர். அப்போதிலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் மாடுகளை கிராமத்தினர் வேலை வாங்குவது கிடையாது. இந்த வழக்கம் ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டு மீனவர்களை தாக்க கூடாது..7 முறை இலங்கையிடம் வலியுறுத்திய மத்திய அரசு- ராஜ்யசபாவில் தகவல்!
விடுப்பு
தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 25க்கும் அதிகமான கிராமங்களில் மாடுகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. சில கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமைக்கு பதில் வியாழக்கிழமை விடுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் எப்படி இருந்தாலும் ஒரு நாள் விடுப்பு கட்டாயமாக கொடுக்கப்படுகிறது. அதேபோல, மாடுகளுக்கு என தனியாக பூஜையும் செய்யப்படுகிறது. தங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஒருவராக மாட்டை இக்கிராம மக்கள் கருதி வழிப்படுகின்றனர். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் விடுப்பு நாட்களில் மாட்டிடமிருந்து பால் கூட கறக்க மாட்டோம் என்று அதன் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
பூமி
இது குறித்து ஊர் மக்கள் கூறுகையில், "எங்களுக்கு இந்த பூமிதான் எல்லாம். எங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும், இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் இந்த பூமிதானே எல்லாம். அப்படி இருக்கும்போது இந்த பூமியிலிருந்து நாம் உணவை உற்பத்தி செய்ய பயன்படுத்தும் கால்நடைகளை நன்றாக பராமரிக்க வேண்டாமா? எங்கள் முன்னோர்கள் செய்த தவறை நாங்களும் செய்ய விரும்பவில்லை. மாடு எங்களுக்கு உணவை உற்பத்தி செய்ய பயன்படுகிறது. மறுபுறம், பால், தயிர், வெண்ணெய் போன்றவற்றையும் கொடுத்து உதவுகிறது. இப்படி பயன்படும் மாட்டை நாங்கள் சரியாக பராமரித்தால்தானே இன்னும் கூடுதல் ஆண்டுகளுக்கு அது எங்களுக்கு பயன்படும்.
பழங்குடியினர்
எனவேதான் நாங்கள் மாட்டிற்கு ஒருநாள் விடுப்பை கொடுக்கிறோம். இந்த ஒருநாள் விடுப்புக்கு பின்னர் மாடு புத்துணர்ச்சியுடன் வேலை செய்கிறது. மேலும், நீண்ட நாட்களுக்கு எங்களுக்காக இது உழைக்கிறது. எனவேதான் நாங்கள் இதற்கு உரிய மதிப்பு கொடுக்கிறோம்" என்று கூறியுள்ளனர். இது குறித்து ஹெத்-போச்ரா பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர் ராமேஷ்வர் சிங் கூறுகையில், "இந்த பகுதியில் பழங்குடியினர் அதிகம். நாங்கள் இங்கு வராததற்கு முன்னரே இந்த பகுதியில் இம்மக்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். மாடுகளுக்கு ஒருநாள் விடுப்பு வழங்குவது என்பது இவர்களுடைய பழக்கம்தான். பின்னர்தான் நாங்கள் இதனை பின்பற்ற தொடங்கினோம்.
வியாழக்கிழமை
அவர்கள் ஞாயிற்றுக்கிழமை விடுப்பு கொடுப்பார்கள். ஆனால் நாங்கள் வியாழக்கிழமை விடுப்பு கொடுக்கிறோம். ஏனெனில் எங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலும் பணிகள் இருக்கும். எனவே வியாழக்கிழமை மாடுகளுக்கு பூஜை செய்த அதனை குளிப்பாட்டி ஓய்வு கொடுத்து விடுவோம். அன்றைய தினம் எவ்வளவு அவசரமான பணிகள் இருந்தாலும் நாங்கள் மாட்டை வேலை வாங்க மாட்டோம்" என்று கூறியுள்ளார்.