வெறும் 178 யூனிட் மின்சாரம்... வந்த பில்லோ ரூ.23 கோடி.. உ.பியில் ஷாக் அடித்த மின்வாரியம்
கனோஜ்:உத்தரப்பிரதேசத்தில் வெறும் 178 யூனிட் மின்சாரம் பயன் படுத்தியதற்கு 23 கோடி ரூபாய் பில் அனுப்பி வாயை பிளக்க வைத்துள்ளது மின்துறை.
பொதுவாக உத்தரப்பிரதேசம் பல்வேறு சர்ச்சைகளுக்கும், முக்கிய நிகழ்வுகளுக்கும் பெயர் போன மாநிலமாகும். அண்மையில் பசுக்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக வீதிகளில் திரிந்த மாடுகள், பள்ளிக்கூட வளாகத்தில் கட்டி வைத்து பராமரிக்கப்பட்டன.
அதே போல.. அங்குள்ள அரசியல் கட்சி தலைவர்களும் ஏதாவது ஒன்றை பேசி சர்ச்சைகளை தொடங்கி வைத்துச் செல்வதும்... அதனின் பின்னூட்டமாக பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறுவதும் வழக்கம். அரசு அலுவலகங்களின் நிலைமையும் .. அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளுக்கு சளைத்தது அல்ல.

ரூ.23 கோடி மின்கட்டணம்
அதற்கு உதாரணமாக அம்மாநிலத்தில் உள்ள ஒருவருக்கு 23 கோடி ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மின்துறை பில் அனுப்பி ஷாக் கொடுத்துள்ளது. கனோஜ் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் பாசித். அவர் வீட்டில் பயன்படுத்திய மின்சாரத்தின் மொத்த யூனிட் 178.

பயன்படுத்தியது 178 யூனிட்
அதற்கு சில சொற்பத் தொகை கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும். மிக எளிதாக கணக்கிட்டால் கூட செலுத்தப்பட வேண்டிய தொகை சில நூறுகளில் தான் இருக்கும். ஆனால்... அவருக்கு மின்துறையில் இருந்து அனுப்பப்பட்ட கட்டண தொகையின் விவரம் என்ன தெரியுமா? 23 கோடியே 67 லட்சத்து 71,524 ரூபாய். அதுவும் வெறும் 178 யூனிட் பயன்பாட்டுக்கு.

மயக்கம் வராத குறை
வந்த பில் தொகையை கண்டு மயக்கம் வந்த நிலைக்கு தள்ளப்பட்ட அவர், உடனடியாக இது குறித்து மின்சாரத்துறைக்கு புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து அப்துல் பாசித் கூறியதாவது:
எனக்கு வந்திருக்கும் இந்த மின்கட்டணமானது.. உத்தரப்பிரதேச மாநில முழுமைக்கும் ஆனது போல தெரிகிறது. வாழ்க்கை முழுவதும் நான் பணம் சம்பாதித்தாலும் இந்த பணத்தை என்னால் எட்டமுடியாது என்று கூறினார்.

தவறுகள் நிகழ்கின்றன
அப்துல் பாசித்தின் புகாரை மின்வாரியத்துறை பெற்றுக்கொண்டுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள மின்வாரிய அதிகாரிகள், இது போன்ற சில தவறுகள் நிகழ்ந்துவிடுகின்றன.

விசாரணைக்கு உத்தரவு
அவருக்கான கட்டணம் மாற்றி வழங்கப்படும். மின்சார மீட்டரில் ஏதேனும் பழுது உள்ளதா என்று ஆராயப்படும். கணக்கீடுகள் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும். அதன் பின்னர் அப்துல் பாசித் பணம் செலுத்தினால் போதும் என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications