மோடி போட்டியிடும் வாரணாசியில் 77 பேர் வேட்புமனு தாக்கல்- மெஷினா? வாக்கு சீட்டா?
வாரணாசி: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் 77 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு வாபஸுக்கு பின்னரும் 64 வேட்பாளர்களுக்கு மேல் களத்தில் இருந்தால் வாக்குப் பதிவு எந்திரத்துக்குப் பதில் வாக்கு சீட்டுதான் பயன்படுத்தப்படும் நிலை ஏற்படும் என்கின்றனர் தேர்தல் அதிகாரிகள்.
பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி அம்மாநிலத்தின் வதோதரா மற்றும் உ.பி.யின் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். வதோதராவில் மோடியை எதிர்த்து 7 பேர் களத்தில் இருக்கின்றனர்.

வாரணாசி தொகுதியில் நேற்று மோடி வேட்புமனுத் தாக்கல் செய்தார். அங்கு நேற்றுடன் வேட்புமனுத் தாக்கலும் முடிவடைந்தது. மொத்தம் 78 பேர் அங்கு வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். நேற்று ஒருவர் மோடிக்கு ஆதரவாக வேட்புமனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார். தற்போது 77 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கின்றனர்.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. வேட்புமனுக்களை திரும்பப் பெற ஏப்ரல் 28-ந் தேதி கடைசிநாள்.
தற்போதைய நிலவரப்படி சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் என 38 அரசியல் கட்சி வேட்பாளர்களும் 39 சுயேட்சை வேட்பாளர்களும் என 77 பேர் களத்தில் உள்ளனர்.
ஒரு லோக்சபா தொகுதியில் அதிகபட்சம் 64 வேட்பாளர்கள் இருந்தால்தான் வாக்குப் பதிவு எந்திரத்தை பயன்படுத்தலாம். அதற்கு மேல் போனால் பழைய வாக்குச் சீட்டு முறைதான்.
தற்போதைய நிலையில் வாரணாசி தொகுதியில் வாக்குச் சீட்டு முறைக்கே வாய்ப்பு அதிகம். அப்படி வாக்குச் சீட்டை பயன்படுத்தி தேர்தல் நடத்தினால் வாக்கு எண்ணிக்கை முடிவு வெளியாகவும் தாமதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 28-ந் தேதிக்குப் பின்னர்தான் வாரணாசியில் வாக்குப் பதிவு எந்திரமா? வாக்குப் பதிவு சீட்டா என்பதும் தெரியவரும்.












Click it and Unblock the Notifications