58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்.. மேற்கு வங்கத்தில் ‛சார்’ நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் அதிரடி
கொல்கத்தா: நடந்து முடிந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கையை தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமாக 58 லட்சம் வாக்காளர்கள் அதிரடி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். தமிழகத்தை போல் அடுத்த ஆண்டு மேற்கு வங்க மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் இறந்த வாக்காளர்கள், போலி வாக்காளர்களின் பெயர்களை நீக்கம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதனால் பீகாரை தொடர்ந்து வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR or Special Intensive Revision) பணி நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் யூனியன் பிரதேசங்களான அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவுகள், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது.
கடந்த மாதம் 4ம் தேதி இந்த பணி தொடங்கியது. டிசம்பர் 4ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. ஆனால் அதன்பிறகு தொடர்ந்து காலநீட்டிப்பு வழங்கப்பட்டது. இது மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபட்டது. ‛சார்' படிவங்களை நிரப்பி கொடுப்பதற்கான காலஅவகாசம் மேற்கு வங்கம், ராஜஸ்தான், கோவா, புதுச்சேரி, லட்சத்தீவு உள்ளிட்ட இடங்களில் வசிப்போருக்கான காலஅவகாசம் கடந்த 11ம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதையடுத்து டிசம்பர் 16ம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மேற்கு வங்கம், ராஜஸ்தான், கோவா, புதுச்சேரி, லட்சத்தீவு உள்ளிட்ட இடங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் முக்கிய மாநிலமான மேற்கு வங்கத்தில் மொத்தமாக 58 லட்சத்து 8 ஆயிரத்து 202 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில் 24 லட்சத்து 18 ஆயிரத்து 699 பேர் இறந்துள்ளதாக கூறி நீக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 12 லட்சத்து 1,462 வாக்காளர்களை கண்டுபிடிக்கமுடியவில்லை என்று பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இவர்களை தேடி பிஎல்ஓக்கள் 3 முறை சென்றும் கண்டுபிடிக்க முடியாததால் பெயர்கள் அகற்றப்பட்டுள்ளது.
அதேபோல் 19 லட்சத்து 93 ஆயிரத்து 87 வாக்காளர்கள் தங்களின் முகவரியை மாற்றி உள்ளதால் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இரட்டை வாக்குரிமை இருந்த நிலையில் தற்போது ஒரு வாக்கு நீக்கப்பட்டுள்ளது. மேலும் 1 லட்சத்து 27 ஆயிரத்து 575 போலி வாக்காளர்களின் பெயர்களும், பிற காரணங்களுக்காக 57 ஆயிரத்து 509 வாக்காளர்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளது.
இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் புதிய வாக்காளர்களாக தங்களின் பெயரை இணைத்து கொள்ளலாம். அதற்கான விண்ணப்பத்தை வாங்கி பிஎல்ஓவிடம் பூர்த்தியிட்டு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் புதிய வாக்காளர்களுக்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் பூர்த்தியிட்டு வழங்க வேண்டும். பிறகு பிப்ரவரி 14ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும். அதில் இடம்பெறும் வாக்காளர்கள் மட்டுமே அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தல்களில் வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications